ஜூலை மாத ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி அக்டோபர் 10 வரை நீட்டிப்பு
ஜூலை மாத ஜி.எஸ்.டிஆர்-1 பதிவு செய்ய இறுதி நாள் அக்டோபர் 10ஆக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: ஜூலை மாத ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
21ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் ஹைதராபாத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அரசுகள் செய்த பரிந்துரையின் அடிப்படையில் சுமார் 30 பொருட்களுக்கான வரி திருத்தப்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள் அதிகம் உபயோகிக்கும் பொருட்களான மழைக் கோட்டுகள், ரப்பர் பேண்டுகள், இட்லி மற்றும் தோசை மாவு பாக்கெட்டுகள் போன்றவற்றிற்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல காதி தயாரிப்புகள், கிராமிய கைத்தொழில் தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நடுத்தர மக்களைப் பாதிக்காத வகையில் சிறிய ரக வாகனங்களுக்கு வரி உயர்த்தப்படாது என்றும் அருண் ஜெட்லி கூறினார். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டபோதே, உயர் ரக கார்களுக்கு வரி குறைவாக விதிக்கப்பட்டிருப்பதாக பெரும்பாலோனோர் குற்றம் சாட்டினர்.
ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல்
வணிகர்கள் தங்களின் முதல் ஜிஎஸ்டி வரி கணக்கு (ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வதில் உள்ள தொழில்நுட்ப பிரச்னை தொடர்பாக பல்வேறு மாநில அமைச்சர்கள் பேசினர். சுமார் 62 லட்சம் வணிகர்கள் இணையதளம் மூலமாக வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அக்டோபர் 10 வரை தாக்கல்
ஆனால், ஒரே சமயத்தில் பலரும் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வர் முடங்கியது. இதனால் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
சொகுசு கார்கள்
தவிர, தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறிய ரக கார்கள், சொகுசு கார்கள், வாகனங்களுக்கு உபரி வரியை உயர்த்துவதில்லை. தற்போது 50 சதவீதமாக உள்ள வரி 43 சதவீதமாக குறையும். நடுத்தர ரக கார்களுக்கு 2%, பெரிய கார்களுக்கு 5%, எஸ்யுவி வாகனங்களுக்கு 7% வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை இனி உயரும்.
இட்லி, தோசை மாவு
பொட்டுக்கடலை, இட்லி-தோசை மாவு, புண்ணாக்கு, மழைக்கோட்டு, ரப்பர் பேண்டு உள்பட 30 பொருட்களுக்கு ஜிஎஸ்வரி குறைக்கப்படுகிறது.
வரி குறைப்பு
பாதாம் பருப்பு மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அரசு பணி ஒப்பந்தங்களுக்கான வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கு
கதர் மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் கதர் துணிகளுக்கு ஜிஎஸ்டி இருந்து வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ரூ. 95000 கோடி வசூல்
வரி செலுத்த தகுதியான 70 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி.யில் கணக்கு தாக்கல் செய்திருப்பதன் மூலம் ரூ.95 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது.