ஜிஎஸ்டி வரி உள்ளீட்டு வரி வரவு - கிடைக்குமா கிடைக்காதா? தொடரும் குழப்பம்
ஜிஎஸ்டி தாக்கல் செய்தாலும் தங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு பயன்பாடு முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
டெல்லி: வர்த்தகர்களும் தொழில் துறையினரும் மாதா மாதம் ஜிஎஸ்டி ரிட்டன் மற்றும் வரியை தாக்கல் செய்தாலும் தங்களுக்கு உள்ளீட்டு வரிப்பயன் மற்றும் வாட் வரியில் மீதமிருக்கும் உள்ளீட்டு வரியை திரும்ப பெறமுடியுமா? என்ற குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. அப்போது வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் இருந்த பெரிய குழப்பம் மற்றும் பயம் என்னவென்றால், ஜூன் மாதம் வரையிலும் தங்களின் கணக்கில் இருக்கும் வாட் உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான வரிப்பயன்பாடு (Transitional Credit) ஆகிய இரண்டு பயன்களையும் புதிய வரிமுறையான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் திரும்ப பெற்றுக்கொள்ளமுடியுமா? என்பதுதான்.
தொழில் துறையினருக்கும், வர்த்தகர்களுக்கும் இருந்த பயமும் குழப்பமும் பயமும் நியாயமானதே. ஏனெனில் வாட் வரி விதிப்பு முறையில், உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் செய்தபோது செலுத்திய உள்ளீட்டு வரியை விற்பனை செய்ததற்கான வரியை செலுத்தும்போது உள்ளீட்டு வரி வரவை (Input Tax Credit) கழித்து நிகர வரியை மட்டுமே செலுத்திவந்தனர்.
வாட் வரிவிதிப்பு முறையில் 2016ம் ஆண்டு ஜூன் இறுதியில் ஒதுக்கீடு (Provisional) செய்து இருப்பில் உள்ள உள்ளீட்டு வரி வரவை ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் எப்படி திரும்ப பெறமுடியும் என்பது பற்றி தெளிவான விளக்கம் அளித்த ஜிஎஸ்டி ஆணையம், வாட் வரி முறையில் பயன்படுத்தாமல் இருப்பில் உள்ள உள்ளீட்டு வரி வரவு மற்றும் இறக்குமதி செய்த பொருட்களுக்கான வரி என இரண்டையும், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் 6 மாதங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விளக்கமளித்து.
ஜிஎஸ்டி ஆணையத்தின் விளக்கத்தினை புரிந்தும் புரியாமலும் ஏற்றுக்கொண்ட வர்த்தகர்களும் தொழில் துறையினரும், தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-1, 2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டன்களை உள்ளீட்டு வரி வரவை கழித்துவிட்டு தாக்கல் செய்துவருகின்றனர். இப்படி உள்ளீட்டு வரி வரவை ஒட்டு மொத்தமாக பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஜூலை மாத விற்பனையிலேயே கழித்துவிட்டு நிகர விற்பனை வரியை செலுத்தியதில் சுமார் 64000 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி வரவை திரும்ப எடுத்துக்கொண்டது தெரியவந்தது.
மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை தரப்பில் கூறும்போது, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வர்த்தகர்கள் மற்றம் தொழில் துறையினர் தாக்கல் செய்துள்ள கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர் ரிட்டன்களின் படி சுமார் ஓன்றறை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளீட்டு வரி வரவை பயன்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி ஆணையம் மற்றும் வர்த்தகர்கள், தொழில் துறையினர் இடையே நிச்சயமற்ற தெளிவில்லாத குழப்பம் நிலவி வருவதால், வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்த மாதந்திர ஜிஎஸ்டிஆர் ரிட்டனுக்கும் இறுதி ஜிஎஸ்டி ரிட்டனுக்கும் இடையில் வரி வருவாய் சுத்தமாக பொருந்தாமல் இடைவெளி விழுந்து சுமார் 34400 கோடி ரூபாய் அளவிற்கு வரி வருவாயில் குறைவாக செலுத்தியதாக தெரியவந்துள்ளது.
வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினருக்கும், ஜிஎஸ்டி ஆணையத்திற்கும் இடையே நிலவி வரும் குழப்பத்தினால் ஜிஎஸ்டி வரி வருவாய் மாதா மாதம் கணிசமான அளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி ஆணையம் வர்த்தகர்களும், தொழில் துறையினரும் ஜிஎஸ்டி வரியை சரிவர செலுத்தாமல் வரி வருவாயை குறைத்து காட்டி ஏமாற்றி வருவதாக சந்தேக கண்ணோட்டத்தோடு வர்த்தகர்களின் மாதாந்திர ஜிஎஸ்டிஆர் ரிட்டனுடன் இறுதி ரிட்டன்களுடன் ஒப்பிட்டு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அதே சமயத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் தங்களுக்கு உள்ளீட்டு வரி வரவு பயன்பாடு முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த குழப்பங்களுக்கு விளக்கமளிக்கும் நிபுணர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் செலுத்திய மாதாந்திர ஜிஎஸ்டிஆர் ரிட்டன்களையும் இறுதி ஜிஎஸ்டி ரிட்டன்களையும் ஜிஎஸ்டி கவுன்சிலின் தணிக்கை குழு நடப்பு நிதியாண்டின் இறுதியில் தீவிரமாக ஆராயந்து உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) பயன்பாட்டை வர்த்தகர்களுக்கும் தொழில் துறையினருக்கும் திரும்ப அளிப்பது பற்றி முடிவெடுக்கும். அதுவரையிலும் உள்ளீட்டு வரி வரவு பயன்பாடு திரும்ப கிடைக்குமா! இல்லையா? என்பது கேள்விக்குறியே,
வர்த்தகர்கள் மற்றம் தொழில் துறையினர் தங்களின் விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர்-1 ரிட்டன் தாக்கல் முடிந்தவுடன் தங்களின் பணி முடிந்ததாக நினைக்கின்றனர். ஆனால், அதன் மற்றொரு பகுதியான விற்பனை செய்ததை கொள்முதல் செய்தவர் அதற்கான ஜிஎஸ்டிஆர்-2 ரிட்டனை தாக்கல் செய்தால் மட்டுமே உள்ளீட்டு வரி வரவை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியும். அதுவரையில் விற்பனை என்பது அறைகுறையாக தொங்கிக் கொண்டு நிற்கும்.
ஆகவே விற்பவரும்(Seller) வாங்குபவரும் (Buyer) தங்களின் பணியை முழுமையாக செய்து முடித்தால் மட்டுமே உள்ளீட்டு வரி வரவு பயனை முழுமையாக அறுவடை செய்ய முடியும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்று வரித்துறை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.