டிரான்சிஷன் கிரெடிட்... திரும்பக் கோரிய 162 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஜிஎஸ்டி ஆணையம் முடிவு
ஜிஎஸ்டி அமலாக்கத்தில் டிரான்சிஷன் கிரெடிட் திரும்பக் கோரிய 162 நிறுவனங்களின் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு ஜிஎஸ்டி ஆணையம் ஓலை அனுப்புகிறது
டெல்லி: ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் தீவிரமாக இருக்கும் அதே வேளையில் 162 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு ஜிஎஸ்டி ஆணையம் தயாராகிவருகிறது.
ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால், தாங்கள் ஜூன் மாதம் வரையிலும் சரக்கு கொள்முதல் செய்ததற்காக கிடைத்த உள்ளீட்டு வரி(Input Tax Credit), மற்றும் பொருட்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற சுங்க வரி மற்றும் ஆயத்தீர்வைக்கான உள்ளீட்டு பயன்பாட்டு வரியினை (Transitional Credit) எப்படி திரும்ப பெறமுடியும் என்ற குழப்பத்தில் இருந்தனர்.
ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தும்போதே, வர்த்தகர்களும், தொழில் நிறுவனங்களும் இதே சந்தேகத்தை கேட்டனர்.
ஜிஎஸ்டிஎன் ஆணையம்
இந்த சந்தேகத்திற்கு விளக்கமளித்த ஜிஎஸ்டிஎன் ஆணையம், வாட் மற்றும் சேவை வரி வதிப்பில் ஜூன் மற்றும் அதற்கு முன்பு ஆறு மாதம் வரையிலும் செய்யப்பட்ட கொள்முதல் மற்றும் சேவை வரியின் உள்ளீட்டு பயன்பாட்டு வரியினை (Input Tax Credit) ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரித் தாக்கலின் போது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியது.போட்டு வாங்குவது என்பது இதுதான் போல.
ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல்
தொழில்நிறுவனங்களும் வர்த்தகர்களும் அடித்துப் பிடித்து ஜூலை மாதத்திற்கான மாதாந்திர ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை தாக்கல் செய்துவிட்டு, கூடவே முந்தைய மாதங்களுக்கான உள்ளீட்டு வரியையும் கழித்து விட்டு மீதம் உள்ள ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் ஆன்லைனில் செலுத்திவிட்டு தற்போது அதற்கான மாதத்திற்கான கொள்முதல், விற்பனை மற்றும் படிவங்களான ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-2 படிவங்களை தாக்கல் செய்தற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ. 95,000 கோடி
இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்டு மாதத்திய நிலவரப்படி ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியாக சுமார் 95,000 கோடி ரூபாய் வசூலானதாக தெரிவித்தார். இதன்மூலம், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல் படுத்தப்பட்டதற்கான நோக்கம் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.
162 நிறுவனங்கள்
தற்போது, வாட் மற்றும் சேவை வரி, இறக்குமதிக்கான சுங்க வரி விதிப்பில் மீதம் இருந்த உள்ளீட்டு வரிப் பயன்பாடாக (Transitional Credit) 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 162 நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு திரும்பப் பெறப்பட்ட உள்ளீட்டு பயன்பாட்டு வரியானது சுமார் 65000 கோடி ரூபாய் ஆகும்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய சுங்க வரிகள் வாரியம் ஜிஎஸ்டி ஆணையத்திற்கு தெரிவித்து, இதில் தவறுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், கூடவே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளீட்டு பயன்பாட்டு வரியினை திரும்பப் பெற்ற சுமார் 162 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதுமாறு தெரிவித்துள்ளது.
வரித்துறை ஆணையர்களுக்கு உத்தரவு
இந்த 162 நிறுவனங்களின் கணக்குகள், அவை வைத்துள்ள சரக்குகளின் கையிருப்பு அளவு, அவை செலுத்திய உற்பத்தி வரி தொகை ஆகிய விவரங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்குரிய தகவல்களை அனுப்புமாறு அந்தந்த பகுதி வருமான வரித்துறை ஆணையர்களுக்கு தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
ஆராய உத்தரவு
மேலும், இந்நிறுவனங்களின் கடந்த ஆண்டுகளின் வாட் வரிப் படிவங்களையும் ஆராயுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ஜிஎஸ்டி வாரியம் மேற்கண்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு வரும் நாட்களில் கடிதம் எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.