சாட்டையை சுழற்றும் Meta.. 8000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பயத்தில் நடுங்கும் டெக் ஊழியர்கள்!
உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் 2026ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவிலான பணிநீக்கத்தை செய்ய திட்டமிட்டுள்ளது. மே 20ஆம் தேதி முதல் தொடங்கும் முதல் கட்ட பணிநீக்கத்தில் உலக அளவில் உள்ள மெட்டா பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர்.
இதன் மூலம் தோராயமாக 8,000 பணியாளர்கள் தங்களுடைய பணியை இழக்க உள்ளனர். மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பல நூறு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து வருகிறார். இந்த முதலீடு நிறுவனத்தின் செயல்பாட்டை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில் உள்ளது.

மேலும AI உதவியால் பல பணிகளை தானியங்கி முறையில் செய்ய முடியும் என்பதால் பெரிய அளவிலான மனித ஊழியர்கள் தேவை குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நிறுவனம் சிறிய, திறமையான குழுக்களை மட்டும் வைத்துக்கொண்டு செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் திட்டமிடுகிறது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க் தனது நிறுவனத்தில் சுமார் 65 சதவீத கோடிங் ஏஐ வாயிலாக செய்யப்படுவதால் மனித ஊழியர்களின் தேவை பெரிய அளவில் குறைவதாக அறிவித்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில் மெட்டா தற்போது 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இவை அனைத்திற்கும் ஏஐ மட்டுமே அடிப்படை காரணமாக உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் முதல் கட்ட பணிநீக்கத்தில் 10 சதவீத பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலையில், ஆண்டின் இரண்டாவது பாதியில் மேலும் பல பணிநீக்க சுற்று நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 2026ல் மட்டும் மொத்தத்தில் மெட்டா நிறுவனத்தில் 20 சதவீதம் வரை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது.
AI தொழில்நுட்பம் பயன்பாட்டின் மூலம் நிறுவனத்தில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டால் இந்த பணிநீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். இல்லையெனில் குறையும். மெட்டா மட்டும் இந்த மாற்றத்தை சந்திக்கவில்லை, அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் இதே நிலையை தான் எதிர்கொண்டு வருகிறது.
அமேசான் நிறுவனம் ஏற்கெனவே 30,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல் பிளாக் இன்க் நிறுவனம் தனது பணியாளர்களில் 50 சதவீதத்தை குறைத்துள்ளது. 2026ஆம் ஆண்டில் இதுவரை 73,000க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்கள் பணியாளர்கள் தங்களுடைய வேலை இழந்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருப்பக்கம் மக்களின் பணியை எளிதாக்கி வருகிறது, பணிகளை விரைவாக முடித்து சந்தையில் பெரும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக அதிகப்படியான முதலீடு செய்ய வேண்டிய நிலை இருப்பதால் செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது டெக் நிறுவனங்கள்.
இதேவேளையில் போர், பணவீக்கம், வர்த்தக மந்தநிலை ஆகியவற்றால் வட்டி விகிதம் உயர்வாகவே இருக்கும் காரணத்தால் கடனுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் காலாண்டு முடிவுகளிலும், வருடாந்திர முடிவுகளிலும் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை கையில் எடுத்து வருகிறது.














Click it and Unblock the Notifications