புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் ரூ.245 கோடிக்கு மது விற்பனை
சென்னை: புத்தாண்டையொட்டி 2 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ. 245 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
பண்டிகை காலங்கள், புத்தாண்டு என்றால் டாஸ்மாக் கடைகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆண்டுக்கு ஆண்டு இந்த விற்பனை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் நடந்த மதுபான விற்பனை விவரத்தை பார்ப்போம்.
ரூ.95 கோடி
புத்தாண்டையொட்டி பிராந்தி, விஸ்கி, ரம், பீர் போன்ற மதுபான வகைகள் அமோகமாக விற்பனையாகியுள்ளன. புத்தாண்டுக்கு முந்தைய நாளில் ரூ.95 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
ரூ.150 கோடி
புத்தாண்டு அன்று ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ரூ.85 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்துள்ளது. ஆக 2 நாட்களில் மட்டும் ரூ. 245 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
சென்னை முதலிடம்
மாநில அளவில் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தான் அதிக அளவில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சென்னையை அடுத்து கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடைவாரியாக பார்க்கையில் குறைந்த எண்ணிக்கையிலான கடைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான வகைகள் விற்பனையாகியுள்ளது.
எலைட்
சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஷாப்பிங் மால்களில் தொடங்கப்பட்டுள்ள எலைட் மதுபானக் கடைகளில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.