போர் பீதி.. நேற்று விழுந்த ரூபாய் இன்று நிமிர்ந்தது!
மும்பை: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற அச்சம் எழுந்ததால், நேற்று வீ்ழ்ச்சி அடைந்த ரூபாய் மதிப்பு இன்று சற்று சுதாரித்து நிமிர்ந்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை குறி வைத்து இந்திய பாதுகாப்புப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதால் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளுமோ என்ற பரபரப்பும் எழுந்தது. இதனால் நேற்று சென்செக்ஸ் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை வீழ்ச்சி அடைந்தது.
நேற்று ரூபாய் மதிப்பானது 39 பைசா வரை வீழ்ச்சி அடைந்தது. இன்று இந்த நிலை மாறியது. இன்று காலை நிலவரப்படி ரூபாய் மதிப்பானது 16 பைசா உயர்ந்து ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 66.69 ஆக இருந்தது.
அந்நிய முதலீடுகள் அதிகரிப்பும் ரூபாய் மதிப்பு உயர முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் 107.72 புள்ளிகள் குறைந்து 27,719 ஆக இருந்தது.