கோடை முடிந்த உடன் டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின் விலை உயரப்போகுது - காரணம் ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல் படுத்தப்பட்டால், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து ஜூலை மாதம் முதல் மின்னணு சாதனங்களின் விலை 15 சதவிகிதம் வரையிலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளால் வெயில் காலம் முடிந்த உடன் வரும் ஜூலை மாதம் முதல் மின்னணு சாதனங்களின் விலை 15 சதவிகிதம் வரையிலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல் படுத்தப்பட்டால், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். பொருட்களின் விலை உயர்ந்தால் அது நுகர்வோரைத்தான் நேரடியாக பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்திருந்தனர்.
ஏனெனில் வாட் வரி விதிப்பில் குறைந்த வரி விதப்பு கட்டமைப்பில் 14.5 சதவிகிமாக இருந்த பொருட்கள் எல்லாம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் அதிக பட்ச வரியான 28 சதவிகிமாக அதிகரித்தது. ஜிஎஸ்டி வரி விதப்பு முறை அமல்படுத்தப்பட்டால், தொடக்கத்தில் அனைத்து பொருட்களின் விலை ஏறினாலும், பின்னர் சில மாதங்களில்நிச்சயம் விலை குறையும் என்றும் இதனால் நுகர்வோர்தான் நேரடியாக பயன் அடைவார்கள் என்று பெரும்பாலான வரி ஆலோசர்களும் கணக்கு தணிக்கையாளர்களும் எதிர்வாதம் செய்து வந்தனர்.
வரி ஆலோசகர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் சொன்னதற்கு மாறாக, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் இருந்தே அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாவே இருந்தது வருகிறது. இடையில் சற்று விலை குறைவது போல தோன்றினாலும், விலை ஏறுமுகமாகவே உள்ளது.
ஆடம்பர பொருட்கள் விலை உயரும்
ஆடம்பரப் பொருட்களாக இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களான டிவி, வாசிங்மெஷின். ஃபிரிட்ஜ் மற்றும் ஏர் கண்டிசனர் ஆகிய பொருட்கள் ஏற்கனவே உச்சபட்ச விகிதமான 28 சதவிகித வரி விதிப்பு கட்டமைப்பில் உள்ளன. இதனால் இந்த பொருட்களின் விற்பனையும் கடந்த 10 மாதங்களாக சற்று மந்தமாகவே உள்ளது. இதனால் ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து விற்பனை நிறுவனங்களும் கவலையில் ஆழ்ந்துள்ளன.
15% விலை உயரும் அபாயம்
வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை மேலும் கவலையில் ஆழ்த்தும் விதிமாக, தற்போது வரும் ஜூலை மாதம் முதல் டிவி, வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களின் விற்பனை விலை தற்போது விற்கும் விலையில் இருந்து மேலும் சுமார் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை விலை உயரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிகபட்ச ஜிஎஸ்டி வரி
முன்னணி மின்னணு உற்பத்தி நிறுவனங்களான சாம்சங், ஐஎஃப்பி, எல்ஜி, கோத்ரேஜ், சோனி போன்ற நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலையும், அதற்கான ஜிஎஸ்டி வரியும் அதிகமாக உள்ளதால் தனிச்சையாக உற்பத்தி செலவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை வேறு வழியில்லாமல் நுகர்வோரின் தலையில் தான் சுமத்தவேண்டி உள்ளது.
எவ்வளவு விலை உயரும்
ஆடம்பர பொருட்களான டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏர்கண்டிசனர் போன்றவை தற்போது விற்கும் விலையை விட சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரையிலும் விலை ஏறும் என்று மேற்கண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக 32 இன்ச் டிவி தற்போது 12000 முதல் 15000 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் வரும் ஜூலை மாதம் முதல் மின்னணு பொருட்கள் எல்லாம் சுமார் 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலும் விலை உயரும் என்று தெரிகிறது.
விலை உயர்வு தள்ளி வைப்பு
விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்த முன்னணி உற்பத்தி நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, நாங்கள் தற்போது வேறு வழியில்லாமல் தான் விலை உயர்வை தள்ளி வைத்துள்ளோம். இதனால், மின்னணு சாதனங்களின் விற்பனையும் நடப்பு நிதி ஆண்டின் தொடக்கம் முதலே மந்தமாகவே உள்ளது. எனவேதான், வரும் ஜூலை மாதம் முதல் மின்னணு சாதனங்களின் விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஜிஎஸ்டியால் விற்பனை சரிவு
ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களின் விற்பனையானது வெய்யில் வருத்தெடுக்கும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த சீசனில், ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களின் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது. நாளொன்றுக்கு ஒற்றை இலக்க எண்களிலேயே விற்பனையாகி வருகிறது. மின்னணு பொருட்களின் விலை உயர்வே இந்த மந்தகதிக்கு காரணமாகும்.
விலை உயர்வால் பாதிப்பு
கடந்த ஆண்டு மே மாதம், ஜூன் மாதங்களில் மின்னணு பொருட்களின் விற்பனை 30 சதவிகிதத்தை எட்டியுள்ளது. ஆனால் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி போன்ற பொருட்கள் 28 சதவிகித வரி கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டதால் விற்பனையும் மந்தமாகவே இருந்து வருகிறது. போதாக் குறைக்கு வரும் ஜூலை முதல் விலை உயரும் என்பது நுகர்வோரைத்தான் பாதிக்கும் என்பது கண்கூடு.