ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு- ஜனவரி முதல் அமல்!
சண்டிகர்: ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்குவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.
அரசு பணிகளில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் துறைக வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
சில மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே தனியார் வேலைவாய்ப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு என்கிற சட்டம் அமலில் உள்ளது. தமிழகத்திலும் பிற மாநிலத்தவர் ஆதிக்கத்தைத் தடுக்க வகை செய்யும் வகையில் தமிழ்நாட்டில் தமிழருகே தனியார் வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.

ஜனவரி முதல் அமல்
இந்நிலையில் ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்கிற சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஹரியானா சட்டசபையில் இதற்கான சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற சட்டம் ஜனவரி 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்றார்.

யாருக்கு பொருந்தும்?
மாத ஊதியம் ரூ.30,000க்கு கீழே உள்ள்ள அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், உள்ளிட்டவை பின்பற்றி நடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பற்றாமல் இருந்தால் நடவடிக்கை
மேலும் இந்த சட்டத்தை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா வரவேற்றுள்ளார். ஹரியானா அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என்பதை தற்போது நிறைவேற்றி இருக்கிறது என்றார்.

இளைஞர்களுக்கு நம்பிக்கை
இந்த சட்டத்தை ஹரியானா முழுமையாக அமல்படுத்தினால் அம்மாநில இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகாது. மேலும் பல மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. இது மாநிலங்களில் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைகளுக்காக காத்திருக்கும் பல கோடி இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications