பஞ்சாபில் காத்திருக்கும் ட்விஸ்ட்? வெறும் 24 மணி நேரத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த மாபெரும் ரெஸ்பான்ஸ்
சண்டிகர்: பஞ்சாப் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் முக்கிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாபுக்கு வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து மார்ச். 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பஞ்சாப்: 25 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆம் ஆத்மியில் சேர விரும்பினர்... மறுத்துவிட்டோம்: கெஜ்ரிவால்
பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. எனவே, அங்கு எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், கடும் போட்டி நிலவுகிறது. பாஜக, முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இருப்பினும், இதில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி
சமீபத்தில் அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட ஆம் ஆத்மி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்குத் தேர்தல் பிரசாரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட தேர்தலில் வென்றால் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அவர் அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியைச் சேர்ந்தவர் என்றும் பஞ்சாப் மக்கள் வெளியாளிடம் ஆட்சியைத் தரக் கூடாது என்றும் ஆளும் தரப்பு பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
மாபெரும் ரெஸ்பான்ஸ்
இதற்குப் பதிலடி தரும் விதமாகப் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபைத் சேர்ந்த ஒருவரே முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் அந்த முதல்வர் வேட்பாளரையும் கூட பஞ்சாப் மக்களே தேர்ந்தெடுப்பர் என்றும் அறிவித்தார்.இதற்காக "மக்கள் தங்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார்கள்" என்ற பெயரில் சர்வே ஒன்றையும் அக்கட்சி தொடங்கியுள்ளது. இதற்கு கிடைத்துள்ள மாபெரும் ரெஸ்பான்ஸ் ஆம் ஆத்மி கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரே நாள்
இந்த சர்வே தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆம் ஆத்மியின் சர்வே-இல் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாகப் பஞ்சாப் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் ஹர்பால் சிங் சீமா கூறுகையில், "வெறும் 24 மணி நேரத்தில் 3 லட்சம் வாட்ஸ்அப் மெசேஜ்கள், 4 லட்சம் ஃபோன்கால்கள், 50 ஆயிரம் மெசேஜ்கள், ஒரு லட்சம் வாய்ஸ் மெசெஜ்கள் என மொத்தம் 8 லட்சம் பேர் இந்த சர்வே-இல் பங்கேற்றுள்ளனர்" என்றார்.
Recommended Video
முதல்வர் வேட்பாளர்
ஒட்டுமொத்தமாக அனைத்து தரவுகளைச் சேர்த்து பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் வரும் ஜன.17 மாலை 5 மணி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரைப் பஞ்சாப் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என அக்கட்சியின் தேடிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பம் பகவந்த் மான் என்று குறிப்பிட்டுள்ளார். அக்கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் அவருக்கே அதிக ஆதரவு உள்ளதால் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானே அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.