என் தலையை துண்டாக வெட்டினாலும்.. ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்ல மாட்டேன் - ராகுல் காந்தி 'பரபர' பேச்சு
சண்டிகர்: "என் தலையை துண்டாக வெட்டி எடுத்தாலும், ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்ல மாட்டேன்" என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
தனது சித்தப்பா மகனும், பாஜக எம்பியுமான வருண் காந்தி காங்கிரஸில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.
"வருண் காந்தியை நான் கட்டி அணைப்பேன். ஆனால், ஒருபோதும் அவர் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தை நான் ஆதரிக்க மாட்டேன்" என்றும் ராகுல் காந்தி கூறினார்.

நெருக்கம் காட்டும் வருண் காந்தி
ராகுல் காந்தியின் சித்தப்பா மகனான வருண் காந்தி, பாஜகவில் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். வருண் காந்தியின் தாயாரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மோடி அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையை தொடர்ந்து வருண் காந்தி விமர்சித்து வருகிறார். பாஜகவில் இருந்துகொண்டே வருண் காந்தி இவ்வாறு செய்வது அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், சமீபகாலமாக வருண் காந்தி காங்கிரஸில் இணைவார் என்ற வதந்தியும் பரவி வருகிறது.

"கட்டி அணைப்பேன், ஆனால்"..
இந்நிலையில், பஞ்சாபில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், "சஞ்சய் காந்தி காங்கிரஸில் இணைவார் எனக் கூறப்படுகிறதே?" எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது: வருண் காந்தியை அண்ணன் என்ற முறையில் கட்டி அணைப்பேன். ஆனால், ஒருபோதும் அவர் ஏற்றுக்கொண்ட சிந்தாந்த்ததை நான் ஏற்க மாட்டேன்.

தலையை வெட்டினாலும்..
வருண் காந்தி பாஜகவில் இருக்கிறார். அவர் இங்கு வந்தால் அவருக்குதான் பிரச்சினை. எனது சிந்தாந்தமும், அவரது சித்தாந்தமும் ஒன்றுக்கொன்று முரணானது. அவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். என் தலையை துண்டாக வெட்டி எடுத்தாலும், நான் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்ல மாட்டேன். எனது குடும்பத்திற்கென ஒரு கொள்கை இருக்கிறது. ஒரு சித்தாந்தம் இருக்கிறது.

"வருணிடம் இதுபற்றி கூறியிருந்தேன்"
அந்த சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரான சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர் வருண் காந்தி. அந்த சிந்தாந்தத்தை அவர் உள்வாங்கிக் கொண்டார். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை இதுபற்றி வருண் காந்தியிடம் பேசியிருக்கிறேன். அப்போது வருண் காந்தி, ஆர்எஸ்எஸ் நல்ல பணிகளை செய்து வருகிறது என என்னிடம் கூறினார். அப்போது நான், "நமது குடும்பம் எந்த கொள்கைக்காக நின்றுக் கொண்டிருக்கிறது என்பது உனக்கு தெரிந்திருந்தும், அதை நீ ஏற்றுக்கொள்ளவில்லை" எனக் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications