பஞ்சாப் தேர்தல்: சீக்கியர்தான் முதல்வராக முடியுமா?.. தேர்தல் அரசியலை விட்டு விலகிய சுனில் ஜாக்கர்
பஞ்சாபில் சீக்கியர் மட்டுமே முதல்வராக வேண்டும் என கட்சித் தலைமைக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அரசியலில் இருந்தே விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
117 இடங்களுக்கான பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியின் பெயரை அறிவித்தார் ராகுல் காந்தி. இதனால் சுனில் ஜாக்கர் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார். ராஜிவ் காந்திக்கு நெருக்கமாகவும் லோக்சபா சபாநாயகராகவும் இருந்த பல்ராம் ஜாக்கரின் மகன் சுனில் ஜாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் தேர்தல்.. மீண்டும் டிக் செய்யப்பட்ட சரண்ஜித் சிங்.. - ராகுல் போடும் மனக்கணக்கு இதுதான்!
சுனில் ஜாக்கர்
சன்னியின் பெயரை ராகுல் காந்தி அறிவித்தபோது மேடையில் சுனில் ஜாக்கர் இருந்தார். இதனையடுத்து செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தங்கள் கட்சியில் டெல்லியில் உட்கார்ந்திருக்கும் சிலர் பஞ்சாபில் சீக்கியர் மட்டுமே முதல்வராக வேண்டும் என கட்சித் தலைமைக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.
காங்கிரஸ் பதில் என்ன
பஞ்சாபில் இந்து முதல்வராக முடியாது என அம்பிகா சோனி தொடர்ந்து கூறி வருவதாகவும் ஆனால், பஞ்சாப் மக்கள் மதச்சார்பற்றவர்கள் என்றும் ஜாக்கர் தெரிவித்தார். இந்து ஒருவரே பிரதமராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது என்றால், பஞ்சாப் நிலைக்கு காங்கிரஸ் என்ன பதில் வைத்திருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சுனில் ஜாகர் அதிருப்தி
முதல்வர் வேட்பாளருக்கான மற்றொரு போட்டியாளராக இருந்த நவஜோத் சிங் சித்துவும் கட்சியின் முடிவால் கடும் அதிருப்தியில் இருப்பதாக சுனில் ஜாக்கர் கூறினார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சுனில் ஜாகருக்கு 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் சுனில் ஜாகர் முதல்வராகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி மேலிடம் சரண்ஜித்சிங் சன்னியை முதல்வராக்கியது. அப்போது முதலே சுனில் ஜாகர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு
டெல்லி மேலிடம் சமாதானப்படுத்தி சில பொறுப்புகளையும் கொடுத்தது. இருந்தபோதும் சரண்ஜித்சிங் சன்னி, நவ்ஜோத்சிங் சித்து இடையேயான அதிகாரப் போட்டியில் சுனில் ஜாகர் போன்ற சீனியர்கள் ஓரம்கட்டப்பட்டனர். இதனால்தான் சுனில் ஜாகர் இப்போது தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.