பஞ்சாப்: ஆளுநரிடம் ஆட்சி அமைக்க நாளை உரிமை கோருகிறார் பகவந்த் மான்- இன்று கெஜ்ரிவாலுடன் ஆலோசனை
சண்டிகர்/டெல்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில் நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான். முன்னதாக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பகவந்த் மான் ஆலோசனை நடத்துகிறார்.
117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 42.01% வாக்குகளையும் அறுவடை செய்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இதனையடுத்து பஞ்சாப்பில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில் டெல்லியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் 2-வது மாநிலம் பஞ்சாப்.
பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் முன்னிறுத்தப்பட்டிருந்தார். டெல்லியில் நடைபெறும் ஆட்சி மாடலை முன்வைத்து ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் செய்தது. இதற்கு பஞ்சாப் வாக்காளர்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தாம் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கமாட்டேன். விடுதலைப் போராட்டத்தில் தூக்கு மேடையை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த கிராமத்தில்தான் பதவி ஏற்பேன் என அறிவித்திருந்தார் பகவந்த் மான். மேலும் பஞ்சாப் அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இடம்பெறாது; பகத்சிங் மற்றும் அம்பேத்கர் படங்களே இடம்பெறும் எனவும் அவர் கூறியிருந்தார்.
நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்!
இந்நிலையில் சண்டிகரில் இருந்து இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார் பகவந்த் மான். டெல்லியில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் பகவந்த் மான். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மான், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறோம். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நடைபெறாது. பகத்சிங் பிறந்த கிராமத்தில்தான் பதவியேற்பு நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.