ஹையோ, ஹையோ.. ராகுல், பிரியங்கா காந்தி ஜஸ்ட் குழந்தைங்க, ஐன்ஸ்டீன் இல்லை.. அமரீந்தர் சிங் கிண்டல்
சண்டிகர்: ‛‛ அரசியலில் ராகுல், பிரியங்கா குழந்தைகளாக உள்ளனர். இவர்கள் ஒருபோதும் ஐன்ஸ்டீனாக மாற முடியாது. பிற சாதாரண அரசியல்வாதிகளை போன்று அவர்களும் அரசியல்வாதிகளே'' என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் விமர்சனம் செய்தார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநிலத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி கட்சிகள் உள்ளன. இதில் பாஜக 65 இடங்களிலும், அமரீந்தர் சிங் கட்சி 37 இடங்களிலும், தின்ட்சாவின் கட்சி 15 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ராகுல், பிரியங்கா பிரசாரம்
பஞ்சாப்பில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‛‛பஞ்சாப்பின் மருமகள் நான். எனது குழந்தைகளின் உடலில் பஞ்சாப் ரத்தம் ஓடுகிறது'' என சென்டிமெண்ட்டாக பேசி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் குஜராத் மாடல் என பாஜகவும், டெல்லி மாடல் என ஆம்ஆத்மியும் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இதேபோல் ராகுல்காந்தியும் பஞ்சாப்பில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அமரீந்தர் சிங் மீது குற்றச்சாட்டு
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை கடுமையாக விமர்சித்தனர். அதாவது காங்கிரஸ் சார்பில் பஞ்சாப்பில் முதல் அமைச்சராக இருந்தவர், பாஜகவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாகவும், இதனால் தான் அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதை அமரீந்தர் சிங் மறுத்துள்ளார். தேர்தலையொட்டி தனியார் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் அமரீந்தர் சிங் பேசியதாவது:

ஐன்ஸ்ட்டீனாக மாற முடியாது
அரசியலில் ராகுல், பிரியங்கா குழந்தைகளாக உள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்க போவது இல்லை. எனக்கு கொள்ளு பேரன்கள் இருந்தாலும் ராகுல், பிரியங்கா எனக்கு குழந்தைகள் தான். இவர்களினம் தந்தை (ராஜீவ்காந்தி) எனக்கு நல்ல நண்பர். ராகுலுக்கு வயது 50 ஆனாலும் அவரும், பிரியங்காவும் ஐன்ஸ்ட்டீனாக (அறிவியலாளர்)மாற முடியாது. பிற சாதாரண அரசியல்வாதிகளை போன்று அவர்களும் அரசியல்வாதிகளே. காலத்திற்கேற்ப அனுபவங்களை பெற்று இருவரும் வளர வேண்டும். ராகுல்காந்தி வளர இன்னும் சிறிது காலம் தேவைப்படும்.

மோடிக்கு நன்றி உடையவன்
டெல்லியில் உள்ள மத்திய அரசு உத்தரவுப்படி நான் இயங்கியதாக கூறுவதில் உண்மை இல்லை. பஞ்சாப்புக்கான கோரிக்கையை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றியதற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். காங்கிரசில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்பில் என்ன நடக்க போகிறது என்பதையும் பார்க்கத்தான் போகிறீர்கள். பஞ்சாப்பில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அது மிகப்பெரும் சாதனையாக இருக்கும். தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். பஞ்சாப்பில் நல்லாட்சியை அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்'' என்றார்.












Click it and Unblock the Notifications