தொடர் விடுமுறை.. இந்த வாரம் ஊருக்கு போறீங்களா..? சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 9, 11, 12 ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 1,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து 9, 11, 12 ஆம் தேதிகளில் 245 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து 9, 11, 12ம் தேதிகளில் 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டள்ளது.

ஏப்ரல் 10 (நாளை) மகாவீர் ஜெயந்தி மற்றும் அதனை அடுத்து தொடர் விடுமுறை வருவதை அடுத்து சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்ற அடிப்படையில் 1680 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மகாவீர் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை (ஏப்ரல் 10), வார விடுமுறை தினங்களான சனிக்கிழமை (ஏப்ரல் 12), ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13), மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை (ஏப்.14) ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு, இன்று புதன்கிழமை (ஏப்.9), வெள்ளிக்கிழமை (ஏப்.11), சனிக்கிழமை (ஏப்.12) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து, பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 190 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 525 பேருந்துகளும், சனிக்கிழமை 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 50 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 100 பேருந்துகளும், சனிக்கிழமை 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதுபோல, மாதவரத்திலிருந்து புதன்கிழமை 20 சிறப்பு பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இவை தவிர, திங்கள்கிழமை பொதுமக்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications