பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அடையாளம் காண வழியில்லையே.. இது அநீதி.. விசிக ரவிகுமார் கருத்து!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதிக்கு எதிரானது என்று விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது.
இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
10% இடஒதுக்கீடு.. SC/ ST/ OBC பிரிவை நீக்கியது தவறு.. தலைமை நீதிபதி லலித், நீதிபதி பாட் தீர்ப்பு
நீதிபதிகள் விசாரணை
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ் பி பார்திவாலா மற்றும் பேலா திரிவேதி ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செல்லும்
இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதேநேரத்தில் இட ஒதுக்கீடு சட்டவிரோதம் என நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பளித்தார். இறுதியாக 5ல் மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாக 10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், நீதிபத் லலித் மற்றும் ரவீந்திர பட் எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
விசிக எம்பி ரவிக்குமார் கருத்து
இதுகுறித்து விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறுகையில், வழக்கு விசாரணை நடந்தபோது, எங்கள் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதங்களை நீதிபதிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை வைத்தே இந்த தீர்ப்பு தான் வரும் என்பதை முன்பே நாங்கள் அனுமானித்தோம். குறிப்பாக மூத்த வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை.
நிபந்தனைகள் இல்லை
பட்டியலினத்தவர்களுக்கோ, பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ இடஒதுக்கீடு வழங்குவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 10 ஆண்டுகள் தான் நீடிக்கும் என்பதை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நீட்டித்து சட்டத்திருத்தம் செய்யப்படுகிறது. அத்தகைய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
அப்பட்டமான அநீதி
அதுபோலவே பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற உத்தரவாதம் செய்வதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது போன்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. இது முற்றிலும் சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பானது. இது நீதி அல்ல, அப்பட்டமான அநீதி. இதனை எதிர்த்து விரிவான அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.