குவிந்த ரேஷன் கார்டுகள்.. இவர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவதில் சிக்கலா?.. அரசின் முடிவு என்ன?
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் சில குறிப்பிட்டரேஷன் கார்டுகளுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார்.
முக்கியமாக இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே குடும்பத்தில் உள்ள வேறு வேறு தம்பதிகள் தனி தனியாக ரேஷன் கார்டுகள் வாங்க தொடங்கி உள்ளனர். உரிமைத் தொகை கிடைக்கும் என்று ரேஷன் கார்டுகளை வாங்கி வருகிறார்கள்.
'வெறும் பேச்சுதான்.. அமைச்சர் சேகர்பாபு செயல்பாபு இல்லை.. செயலற்றபாபு..' வறுத்தெடுத்த ஹெச் ராஜா
தனி நபர்
இது போக கடந்த சில வருடமாக தமிழ்நாட்டில் தனி நபர் ரேஷன் கார்டுகள் வாங்குவது அதிகரித்து வருகிறது. கொரோனா காலம், பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக தனி நபர் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை உயரத்தொடங்கி உள்ளது. பல புதிய தனி நபர் ரேஷன் கார்டுகள் குவியத்தொடங்கி உள்ளது. ஆனால் அதே சமயம் தனி நபர் ரேஷன் கார்டுக்கு வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தனி நபர் ரேஷன் கார்ட் கொண்டவர்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.
கடந்த ஆட்சி
கடந்த ஆட்சியிலேயே இது தொடர்பாக சில வாய் மொழி உத்தரவுகளால் தனி நபர் ரேஷன் கார்டுகளை ரேஷன் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியிலும் தற்போது இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. தனி நபர் ரேஷன் கார்டை எடுத்து சென்று கொடுத்தால் ரேஷன் பொருட்களை வழங்க அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று புகார்கள் வைக்கப்படுகின்றன. இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை சரியாக இன்னும் வெளியிடவில்லை.
ரேஷன் உரிமைத்தொகை
இதன் காரணமாக தற்போது தனி நபர் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களே தரப்படாத நிலையில் இவர்களுக்கு உரிமை தொகையாவது வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை தமிழ்நாடு அரசு தனி நபர் ரேஷன் கார்டுகள் கொண்டவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுமா என்று உறுதியாக தெரிவிக்கவில்லை.
சந்தேகம்
அதேபோல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்தும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பான சந்தேகங்களுக்கு விடை கொடுக்கப்படவில்லை. இதை எல்லாம் காரணம் காட்டி தங்களுக்கு உரிமைத் தொகை மறுக்கப்படுமோ என்று தனி நபர் ரேஷன் கார்ட் வைத்து இருப்பவர்கள் குழம்ப தொடங்கி உள்ளனர். விரைவில் இதற்கான விளக்கம் அரசு தரப்பில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.