தமிழக ரேஷன் கடைகளுக்கு 2021ஆம் ஆண்டில் 11 நாட்கள் விடுமுறை - அரசு அறிவிப்பு
நடப்பாண்டிற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக உணவுத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் ரேசன்கடைகளுக்கு இந்த ஆண்டு 11 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதுதவிர வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த நாட்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக குடும்பங்களுக்கு 2,11,93,724 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6,82,12,884 பேர் பயனடைந்து வருகின்றனர்.

PHH என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை குடும்ப அட்டை என்று பொருள்படும். இதற்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH - AYY என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா என்று பொருள்படும். இதற்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
NPHH என்று குறிப்பிட்டவை முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH - S என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முன்னுரிமையற்ற சர்க்கரை அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
NPHH - NC என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் பொருட்களில்லா அட்டை எனப்படும். இதற்கு எந்தவிதப் பொருட்களும் கிடைக்காது. கவுரவ ரேசன் அட்டை என்று இந்த அட்டையை குறிப்பிடுகின்றனர்.
அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது பொங்கல் பரிசுடன் ரூ. 2500 ரொக்கம் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக உணவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 14, ஜனவரி 26, ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, அக்டோபர் 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகிய 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுதவிர வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த விடுமுறை நாட்களை குறித்து வைத்துக் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications