6 பேர் இறந்த அதே இடம்.. ரயில்போல் பின்னிய 15 வாகனங்கள்! செங்கல்பட்டு அருகே சினிமாவை மிஞ்சும் விபத்து
செங்கல்பட்டு: அச்சரப்பாக்கம் அருகே திண்டிவனம் செல்லும் பிரதான சாலையில் 15 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்கு உள்ளானதால் போக்குவரத்து கடும் பாதிப்பிற்கு உள்ளானது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்துள்ள அச்சரப்பாக்கம். இந்த பகுதியை வழியாக இருக்கும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னையை இணைக்கும் இந்த பிரதான சாலையில் விபத்து தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. அதேபோல் தினசரி இந்த சாலையில் விபத்துகளும் தொடர்கதையாகி வருகின்றன.

15 வாகனங்கள்
இதேபோல் நேற்று மாலை சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த 15 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பெரும் விபத்துக்கு உள்ளாகின. ஞாயிறு அன்று ஏராளமான மக்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு மாலை சென்னைக்கு திரும்புவது வழக்கம். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

பின்னிய வாகனங்கள்
இந்த நிலையில்தான் அச்சரப்பாக்கம் அருகே இந்த விபத்து மாலை 4 மணியளவில் நேர்ந்திருக்கிறது. இதில் கார்கள், தனியார் ஆம்னி பேருந்துகள், டெம்போக்கள், லாரிகள் என அனைத்து வகையான வாகனங்கள் அடங்கும். ரயில் பெட்டிகளைபோல் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு நின்றதால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு
விடுமுறை முடிந்து சென்னைக்கு பணிக்கு திரும்புவோர் இதனால் பாதிக்கப்பட்டனர். நீண்ட நேரமாக வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேநேரம் பெரும்பாலான வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

விபத்துகள் தொடர்கதை
விபத்துக்களுக்கு பெயர்போன அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்றும் விபத்து ஒன்று ஏற்பட்டது. சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications