ஈபிஎஸ் முடிவுக்கு எதிர்ப்பு காட்டும் 2 மாஜிக்கள்.. “மாட்டுறது நாங்க?” சத்தமே இல்லையாம்! இதென்ன கதை?
சென்னை : பாஜக தலைமையை சீண்டும் எடப்பாடி பழனிசாமியின் போக்கால், அவருக்கு நெருக்கமான + பாஜகவுக்கு இணக்கமான இரண்டு அதிமுக மாஜிக்கள் அப்செட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டங்களில் பாஜகவை சீண்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதை அவருக்கு நெருக்கமான மாஜிக்கள் சிலரே விரும்பவில்லையாம்.
ஏற்கனவே சில வழக்குகள் காரணமாக டெல்லிக்கு அலைந்து கொண்டிருக்கும் அந்த முன்னாள் அமைச்சர்கள், டெல்லி பாஜக தலைமையை சங்கடப்படுத்தும் விதத்தில் ஈபிஎஸ் பேசியதால் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈபிஎஸ் போக்கில் மாற்றம்
சமீப சில நாட்களாக எடப்பாடி பழனிசாமியின் போக்கில் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. டெல்லி பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வழங்காமல் இழுத்தடித்து வருவதால், கொஞ்சம் சூடாகவே இருக்கிறார் எடப்பாடி. தனது கருத்தை பொருட்படுத்தாமல் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்படுமாறு டெல்லி தலைமை தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போதே பாஜகவை சீண்டும் வகையில் ஈபிஎஸ் பேசியதாக கூறப்பட்டது.

பாஜகவை சீண்டிய எடப்பாடி
கட்சியில் 95 சதவீத நிர்வாகிகள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள். நமக்கு எதிரானவர்கள், சிலரோடு கூட்டு சேர்ந்துகொண்டு வெற்றியை தடுக்க நினைக்கிறார்கள். அதெல்லாம் தற்காலிக தடை தான், நிரந்தரமாக தடுக்க முடியாது, நம்முடன் கூட்டணி சேர்ந்தால் தான் இங்கு எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியும். நம்மை விட பலம் குறைவானவர்களை வைத்துக்கொண்டு யாராலும் ஜெயிக்க முடியாது, இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என ஈபிஎஸ் பேசியது அதிமுக நிர்வாகிகளுக்கே ஷாக் கொடுத்தது.

நெருக்கமான மாஜிக்கள் ஷாக்
ஈபிஎஸ்ஸின் இந்த அதிரடியை, பாஜக உடனான கூட்டணியை முன்பிருந்தே விரும்பாத சிலர் வரவேற்றாலும், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாஜிக்கள் இருவர் எடப்பாடியின் இந்தப் பேச்சையும், அவரது சமீபகால போக்கையும் ரசிக்கவில்லையாம். டெல்லியை நேரடியாக பகைத்துக் கொண்டால் சிக்கல் நமக்குத்தான், எப்படியாவது பேசி சரிக்கட்டி விடலாம், நீங்கள் அவசரப்பட்டு இப்படி பேசினால் எங்களுக்குத்தான் பிரச்சனை என அவர்கள் ஈபிஎஸ்ஸிடம் குமுறியுள்ளனர்.

அடிக்கடி டெல்லிக்கு
ஏற்கனவே அடிக்கடி டெல்லி சென்று வரும் அந்த மாஜிக்கள், தங்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் டெல்லி தலைமையின் ஆதரவை எதிர்பார்த்து வருகின்றனர். இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு, டெல்லி செல்லும் தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகிறார்களாம். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியின் டென்ஷனால் இவர்களின் பிபியும் இஷ்டத்துக்கு எகிறியுள்ளதாக கூறப்படுகிறது.

சைலண்ட் மோடு
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக அந்த மாஜிக்கள் இருவரையும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாகப் பார்க்க முடியவில்லை. என்ன பின்னணி என விசாரித்தால், அதிமுக பக்கம் இருந்து ஒரு ஆச்சர்யமான தகவல் கிடைக்கிறது. ஈபிஎஸ் பாஜகவை சீண்டும் வகையில் பேசி வருவது நிச்சயம் டெல்லியின் காதுக்குச் செல்லும் என்பதால் நமக்கும் சிக்கல் ஏற்படும் என அவர்கள் நினைக்கிறார்களாம்.

தடாலடி பிளான்
அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியுடனான நெருக்கத்தையும், பொதுவெளிகளில் தங்கள் வாய்ஸையும் ஒரேயடியாக குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைமை அவர்களிடம் விசாரித்தால், ஈபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கைகளில் தங்களுக்கு பங்கு இல்லை என தடாலடியாக மறுப்பதற்காகவே இப்போதே ஈபிஎஸ்ஸுடன் விலக்கத்தைக் கடைபிடிக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications