“ஷாக்” கொடுத்த ரஜினி.. ஏமாந்த ரசிகர்கள்! கரெக்டா 2 வருஷமாச்சு.. கொரோனாவை காட்டி அரசியலில் “எஸ்கேப்”
சென்னை: அரசியலுக்கு இப்போது வருவேன் அப்போது வருவேன் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பேசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர வைத்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்த வேகத்திலேயே கொரோனாவை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இன்றோடு 2 ஆண்டுகள் கடந்துவிட்டது.
"நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார் நாளை என்னவோ.. எந்த சூழலிலும் ஆண்டவர் அரசியலில் என்னை விட்டுவிடக்கூடாது என்று வேண்டுகிறேன்".. "அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்".. "என்னை வம்புக்கு இழுத்தால் சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்"..
"நான் எப்போ வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்".. "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காக்க முடியாது".. "ஜெயலலிதா தைரிய லட்சுமி". இதெல்லாம் ரஜினிகாந்த் சினிமாவிலும், பேட்டிகளிலும் வெவ்வேறு காலகட்டத்தில் பேசிய அரசியல் சார்ந்த கருத்துக்கள்.
“டுவிஸ்ட்” வைத்த ரஜினி.. கடிதத்தின் “டாப் ஸ்பாட்டில்” அண்ணாமலை - “அந்த” இடத்தில் உதயநிதி மிஸ்ஸிங்
30 ஆண்டுக்கு முன்..
1990 ஆம் ஆண்டில் மன்னன் திரைப்படம் வெளியான போதே தமிழ்நாட்டின் நாளைய முதல்வர் என்று போஸ்டர்களை ஒட்டினார்கள் அவரது ரசிகர்கள். அடுத்தடுத்து அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள், ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து, பாமக எதிர்ப்பு, பாபா திரைப்படத்தில் பேசிய ஆன்மீக அரசியல் போன்றவை ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகளை காட்டின.
நம்பிய ரசிகர்கள்
ரஜினி அரசியலுக்கு வருவார்.. நல்லாட்சி தருவார்.. என்று என்று 1990 முதல் நம்பிய அவரது ரசிகர்கள், "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" என்று புலம்பத் தொடங்கியதுதான் மிச்சம். சினிமா ரிலீஸ் சமயங்களிலும், திரைப்படங்களிலும் மட்டும் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசிவிட்டு அமைதியாகிவிடுவதையே கடந்த 25 ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் வழக்கமாக வைத்திருந்தார்.
காத்திருந்து.. காத்திருந்து..
30 ஆண்டுகளுக்கு முன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று துடிப்பாக போஸ்டர்களை ஒட்டுவது, அவரது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவது என்று அவரது செயல்பட்ட ரசிகர்கள், தற்போது முடி கொட்டி முதியோர்களாகி நிற்கிறார்கள். முதுமையால் பழைய சுறுசுறுப்பு அவர்களிடம் இல்லை. அடுத்த தலைமுறையினர் விஜய், அஜித், சூர்யா, சிம்பு, துனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று சென்றுவிட்டார்கள்.
10 ஆண்டாக ஹிட் படம் இல்லை
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசைகளை தண்ணீர் ஊற்றி வளர்த்தாரே தவிர அதை எப்போது அறுவடை செய்வார் என்பது அவருக்கே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்துக்கு பிறகு ரஜினி நடித்த திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறவில்லை.
நேரடி அரசியல் அறிவிப்பு
இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தவுடன் ஒரு வெற்றிடம் ஏற்படவே, அதே ஆண்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி பேசத் தொடங்கிய ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதி நேரடி அரசியலுக்கு வருவதாகவே அறிவித்தார். வயதானாலும், தங்கள் 30 ஆண்டுகால விருப்பம் நிறைவேறியதை உணர்ந்து மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள்.
சர்ச்சை கருத்துக்கள்
ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, காவிரி மீட்பு போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் ரஜினியின் கருத்துக்கள் மக்களுக்கு எதிராக அமைந்தது ரசிகர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெரியார், அண்ணா வார்த்தெடுத்த சமத்துவ பூமியான தமிழ்நாட்டில் ரஜினி முன்வைத்த ஆன்மீக அரசியல், பாஜக சார்பு நிலை போன்றவற்றை அவரது ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. சினிமாவில் உங்களை ரசிக்கிறோம். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் ரஜினி என்று எல்லையை நிர்ணயித்தனர் பல ரசிகர்கள். அவர் மீது பாஜக பி டீம் என்ற விமர்சனமும் கிளம்பியது.
2021 தேர்தல்
இந்த சூழலில்தான் 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கின. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி அரசியல் கொள்கைகளை அறிவித்தார் ரஜினி. தமிழருவி மணியன், முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தியை அழைத்து கட்சி கட்டமைப்பு பணிகளில் ஈடுபட வைத்தார்.
ஜனவரியில் புதிய கட்சி
இந்த சூழலில்தான் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி, "ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. சாதி, மதசார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்." என ட்விட்டரில் பதிவிட்டார் ரஜினிகாந்த். இதனால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள் விறுவிறுப்பாக கட்சிப் பணிகளில் ஈடுபட தொடங்கினார்கள்.
அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
2021 புத்தாண்டுக்காக காத்திருந்த தன்னுடைய ரசிகர்களுக்கு, டிசம்பர் 29 ஆம் தேதி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ரஜினிகாந்த். ட்விட்டரில் அவர் வெளியிட்ட 2 பக்க அறிக்கையை பார்த்த ரசிகர்களின் முகத்தில் ஏமாற்றம் தென்பட்டது. 30 ஆண்டாக எதிர்பார்த்த கனவு ஒரே நொடியில் சுக்குநூறாக தகர்ந்ததை அவர்கள் உணர்ந்தனர். அப்படி அந்த அறிக்கையில் என்ன எழுதி இருந்தது?
குறுக்கே வந்த கொரோனா
அண்ணாத்த படப்பில் இருந்தபோது பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ரஜினியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பலிகடா ஆக்க விரும்பவில்லை
"நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால். நாலு பேர் நாலுவிதமாக என்னைப் பற்றிப் பேசுவார்கள் என்பதற்காக, என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
ஆளுநர் ரவியுடன் சந்திப்பு
இதனை தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வரும் ரஜினிகாந்த், அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ரகசியமாக சந்தித்து பேசியது, டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தது மர்மமாகவே உள்ளது. அதே சமயம், ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
பாபா மறுவெளியீடு
இது அல்லாமல் எந்த பாபா படத்தை காட்டி அரசியலுக்கு அஸ்திவாரம் போட நினைத்து ரஜினி தோல்வியடைந்தாரோ அதே பாபா படத்தில் அரசியல் வசனங்களை வெட்டிவிட்டு அண்மையில் ரீ ரிலீஸ் செய்து மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்தார். இது அல்லாமல் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
அடுத்தடுத்த திரைப்படங்கள்
அதேபோல் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோரது படத்திலும் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். அதேபோல், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், திரைப்பட நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்தை அதிகம் காண முடிகிறது.
மீண்டும் வந்த கொரோனா
எந்த கொரோனாவை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தாரோ, அந்த கொரோனா தற்போது புதிய வடிவில் வந்து மீண்டும் பீதியை கிளம்பி வருகிறது. இந்த சூழலிலும், ரஜினிகாந்த் ஏராளமானோர் கூடி இருக்கும் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கொரோனா அரசியலுக்கு மட்டும்தான் வருமா? சினிமாவுக்கு வராதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அடுக்கடுக்கான எழும் கேள்விகள்
அப்படியெனில் அரசியலில் தன்னால் ஜொலிக்க முடியாது என்பதை முன்கூட்டியே உணர்ந்து அதிலிருந்து ஒதுங்க நினைத்த ரஜினிகாந்த், கொரோனாவை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டாரோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அரசியலுக்கு வர மாட்டேன் என அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவ்வாறு செய்ததாக எந்த தகவலும் இல்லை.
தோல்வி படங்கள்
மக்களை விடுங்கள், தன்னையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பி இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நல்ல திரைப்படத்தை கூட அவரால் கொடுக்க முடியவில்லை. எந்த படப்பிடிப்பின்போது கொரோனா பரவியதாக கூறி அரசியலில் விலகுவதாக ரஜினி அறிவித்தாரோ அந்த அண்ணாத்த படமும் ரசிகர்களை ஏமாற்றமடையவே செய்தது.
பாக்கெட்டை பதம் பார்த்த பாபா
அடுத்து அவர் ரீ ரிலீஸ் செய்த பாபா படமும் தங்கள் பாக்கெட்டையே பதம் பார்த்ததே தவிர, தங்களால் படம் பார்க்க முடியவில்லை என ஆதங்கப்பட்டார்கள் ரசிகர்கள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றும் நிலைத்து நிற்கிறார் ரஜினி. அடுத்தடுத்து படங்களில் நடித்து கோடிகளை குவித்து வருகிறார்.
விஜய், அஜித் ரசிகர்களுக்கு பாடம்
ஆனால், அவரது ரசிகர்கள்தான் போஸ்டர், பேனர் ஒட்டி, மற்ற நடிகர்களி ரசிகர்களுடன் சண்டையிட்டு, இளமையை இழந்து முதுமையில் புலம்பி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் இந்த நிலை, அடுத்து விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று சுற்றித் திரியும், இசை வெளியீட்டு விழாக்களில் போலீசாரிடம் அடிவாங்கும், ட்விட்டரில், திரையரங்க வாசல்களில் சண்டையிடும் அப்பாவி ரசிகர்களுக்கு ஒரு பாடம்.