டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வு.. தேர்வர்களுக்கு முக்கிய அலர்ட்.. அப்ளை செய்ய எப்போ கடைசி நாள்?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கு வருகிற 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன.
ஆண்டுதோறும் இதற்கான கால அட்டவணை வெளியிடும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, 2 ஏ, குரூப் 4 உள்பட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்துகிறது.

161 இடங்களை நிரப்புவதற்கு
அரசு வேலை பல இளைஞரது கனவுகள் என்பதால், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் இத்தகைய தேர்வுகளுக்கு லட்சககணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். அண்மையில் நடந்த குரூப் 4 தேர்வுகளைக் கூட சுமார் 20 லட்சம் பேர் எழுதியிருந்தனர். பெரும் திருவிழா கூட்டம் போல தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள் படையெடுத்தனர். இந்த நிலையில், தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்புவதற்கு குரூப் 5 ஏ ஏ தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மாதம் 23 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

சட்டம் மற்றும் நிதிசாராத பிரிவு
சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் சட்டம் மற்றும் நிதிசாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 74 காலியிடங்கள் உள்ளன. நிதிப் பிரிவு உதவி அலுவலர் பணியிடங்களுக்கு 29 காலியிடங்கள் உள்ளன. சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கு 49 காலியிடங்களூம் நிதி உதவியாளர் பதவிக்கு 9 காலியிடங்களையும் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் அந்தந்த பிரிவினருக்கு ஒதுக்கப்படும் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ 36,400 முதல்
தலைமைச்செயலகத்தில் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் மற்றும் நிதி பிரிவு உதவி அலுவலர் பணிகளுக்கு ஊதியமாக ரூ 36,400 முதல் ரூ 1,34,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிதி மற்றும் நிதிசாராத உதவியாளர் பணியிடத்திற்கும் நிதி உதவியாளர் பணியிடத்திற்கும் ஊதியமாக ரூ 20 ஆயிரம் முதல் ரூ.73,700 வரை என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21-ம் தேதி கடைசி
இந்த தேர்வு அறிவிப்பு வெளியானது முதல் தேர்வர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 21 ஆம் தேதிதான் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 18 ஆம் தேதி தேர்வு நடைபெறும். காலை மாலை என இருவேளைகளிலும் தேர்வு நடைபெறும். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை 100 மதிப்பெண்களுக்கு பொது தமிழ் தாளுக்கும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 100 மதிப்பெண்களுக்கு பொது ஆங்கிலம் தாளுக்கும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்
தேர்வு முடிவுகள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது. தேர்வு தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பாணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications