தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 3ஆவது நாளாக உச்சத்தை தொடும் தொற்று
சென்னை: தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை, சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட விவரங்களை தினந்தோறும் சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் கொரோனா குறித்த அப்டேட்டுகளை தமிழக சுகாதாரத் துறை வழங்கியது. அதில் தமிழகத்தில் கொரோனாவால் 3,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதனால் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா.. கலக்கத்தில் மாணவர்கள்
டிஸ்சார்ஜ்
சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 51,699 ஆகியது. இன்று மட்டும் 2,737 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை 44,094 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். இன்று மட்டும் இதுவரை 68 பேர் மரணமடைந்துள்ளார்கள். 23 பேர் தனியார் மருத்துவமனையிலும் 45 பேர் அரசு மருத்துவமனையிலும் மரணமடைந்துவிட்டார்கள். இதுவரை தமிழகத்தில் 1,025 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.
சளி மாதிரிகள்
இன்று 34, 805 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதுபோல் 34,805 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் 2,300 ஆண்களுக்கும் , 1,412 பெண்களுக்கும், ஒரு திருநங்கைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 47 அரசு பரிசோதனை கூடங்களும் 42 தனியார் பரிசோதனை கூடங்களும் என மொத்தம் 89 கொரோனா பரிசோதனை கூடங்கள் உள்ளன.
வெளிநாடுகள்
சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவுகள், கத்தார், உக்ரைன் ஆகிய வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களிலிருந்து வந்த 8 பேருக்கும், பீகார், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ஒடிஸா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து உள்நாட்டு விமானம் மூலம் வந்த 9 பேருக்கும், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், புதுவை, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளிலிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாக வந்த 72 பேருக்கும் கொரோனா உறுதியானது.
பலி
இதுவரை சென்னையில் அதிகபட்சமாக 776 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். அடுத்ததாக செங்கல்பட்டில் 75 பேர் மரணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்து திருவள்ளூரில் 58 பேரும் மதுரையில் 20 பேரும், காஞ்சிபுரத்தில் 18 பேரும் என இதுவரை 1,025 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.