டாஸ்மாக் மதுபான கடை பாதுகாப்பு பணியில் 3,007 போலீஸ்.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு மே மாதம் அனுமதி அளித்தது. கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்ட காவல்துறையினர் மதுபான கடைகளின் பாதுகாப்புக்காக பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பன்னீர் செல்வம், சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பிற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ள காவல்துறையினரை குறைக்க வேண்டும் என்றும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்ட நெரிசலை தடுக்கவும், கொரானா தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐஜி இ.டி.சாம்சனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான போதிய காவலர்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதுதவிர ரேசன் கடை, மீன் சந்தை, காய்கறி அங்காடி, அத்தியாவசிய தேவகளுக்காக மக்கள் நடமாட்டம், கொரோனா தாக்குதலில் கடடுப்படுத்தப்பட்ட பகுதி, தனிமைபடுத்தப்பட்ட நபர்கள், சோதனை சாவடி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளிலும் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 2 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலும்ம் அறிக்கையில் தாக்கல் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 583 பேரும், பிற பணிக்கு 7 ஆயிரத்து 749 பேரும்; மத்திய மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 363 பேரும் , பிற பணிக்கு 5 ஆயிரத்து 295 பேரும், மேற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 887 பேரும், பிற பணிக்கு 7 ஆயிரத்து 954 பேரும், தெற்கு மண்டலத்தில் டாஸ்மாக் பணிக்கு 764 பேரும், பிற பணிக்கு 11 ஆயிரத்து 876 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 410 பேரும், பிற பாதுகாப்பு பணிகளுக்கு 10 ஆயிரத்து 545 பேரும் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகத்தில் பிற பணிகளுக்கு 43 ஆயிரத்து 119 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரத்து 7 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஊர்காவல் படையை சேர்ந்த 9 ஆயிரத்து 326 ஆண்களும், 2 ஆயிரத்து 59 பெண்களும் என 11 ஆயிரத்து 385 பேர் ஈடுபடுத்தப்பட்டதாகவும் உதவி ஐ.ஜி. சாம்சன் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.