9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலிக்கு அமோக வரவேற்பு.. தமிழக அரசு தகவல்
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.5,348 கோடி காப்பீட்டு நிறுவங்களிடமிருந்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019 வரை 21,75,369 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு கடந்தாண்டு ரூ.5,535 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
2019-20-ம் ஆண்டிலும் நெல் இயந்திர நடவிற்கான மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் கைபேசி செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உழவன் செயலியை இதுவரை 4.50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இச்செயலியில் 6 முக்கிய கூடுதல் சேவைகள் இணைக்கப்பட்டு தமிழக விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பின்னர் பேரவையில் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, வரும் காலத்தில் விவசாயிகளுக்கு 40 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து விவசாயிகளுக்கும் வரிசைப்படி இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தட்கல் முறையில் வசதியுள்ள பெரு விவசாயிகள் மட்டுமே கட்டணம் செலுத்தி மின்இணைப்பு பெறுகின்றனர் என அமைச்சர் தகவல் தெரிவித்தார்.