தமிழகத்தில் மொத்த மக்கள்தொகையில் 5.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்!
சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 5.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 0.9 சதவீதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. முதலில் 45 வயதினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் எத்தனை சதவீதம் பேருக்கு முதல் டோஸ், இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அதாவது 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மே 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமுள்ள மக்கள்தொகையில் 5.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 0.9 சதவீதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டது.
செனஅனையில் உள்ள மக்கள்தொகையில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 3.3 சதவீதம் பேருக்கு 2ஆவது டோஸும் போடப்பட்டுள்ளது. அடுத்தது நீலகிரியில் 12.3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டது.
கோவையில் 7.9 சதவீதமும் வேலூரில் 7.2 சதவீதம் பேரும் தடுப்பூசியை போட்டுள்ளனர். தமிழகத்திலேயே ராமநாதபுரம் , திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 1.5 சதவீதம் பேருக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,05,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://tn.gov.in/district_view என்ற இணையதளத்தை பார்க்கலாம்.