தமிழகத்தில் 3ம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்க தெரியவில்லை.. ஆய்வில் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்கத் தெரியவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வுகளை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் மேற்கொண்டது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவை மூன்றாவது மொழி குறித்த சாய்ஸில் வரும்.
அது போல் வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மனி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளும் சில பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தை எப்படி படித்துவிடலாம். ஹிந்தியை கூட பிரைவேட்டாக படித்துவிடலாம். ஆனால் தமிழை பள்ளிகளில் படித்தால் மட்டுமே முடியும். அதுதான் சரியாக இருக்கும்.
முன்னுரிமை
ஆனால் பெரும்பாலானோர் தமிழுக்கு முன்னுரிமை அளித்து குழந்தைகள் அந்த தமிழை எத்தனை முறை தவறாக எழுதினாலும் படிக்க படிக்கத்தான் வரும் என தாய்மொழியை கற்றுக் கொடுக்கிறார்கள். தமிழ் எனக்கு தெரியாது என பெருமையாக சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமையும் இல்லை. யாரோ ஒரு வெள்ளைக்காரனின் மொழியை நுனி நாக்கில் சரளமாக பேசும் போது தாயை போன்ற தாய் மொழியை கற்றுக் கொள்வதில் ஒரு அசிங்கமும் இல்லை என்பதை பலர் உணர்ந்து வருகிறார்கள்.
தமிழ்மொழி
அந்த வகையில் தமிழ் மொழியை படிக்கும் மாணவர்களில் எத்தனை விழுக்காடு மாணவர்கள் சரியாக படிக்கிறார்கள் என்பது குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றம் ஆய்வு மேற்கொண்டது. அதில் தமிழகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் சரியாகப் படிக்கத் தெரியவில்லை.
20 விழுக்காடு மாணவர்கள்
20 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழ் உரையைப் புரிந்து கொள்கிறார்கள். அதே போல் 47 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே 80 சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது. தமிழகத்தில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே எண்களைக் கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள், வடிவங்களை கொண்ட அடிப்படைகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பாதி பேருக்கு தமிழ் தெரியவில்லை
மூன்றாம் வகுப்பு மாணவர்களில் பாதிப் பேருக்கு தமிழில் படிக்கத் தெரியவில்லை என்ற ஆய்வு முடிவுகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழியை ஊக்குவிக்க அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டினருக்கு,தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை, தமிழ் வழி கல்வியில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுத் தொகை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. எனவே அரசு நலத்திட்டங்களையும் சலுகைகளையும் பெறுவது மட்டுமல்லாமல் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கும் நாம் தமிழை தவறாக படிப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்.