பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்
சென்னை: இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதன் மூலம் நாம் கற்க வேண்டிய 6 பாடங்களை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ் நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்து வந்த இவர் மீது எழுந்த புகார்கள் காரணமாக நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் டாடா சன்ஸ் தலைவர்.. பின் அந்த நிறுவனத்திற்கு எதிராகவே வழக்கு.. யார் இந்த சைரஸ் மிஸ்திரி!
பாடம் 1
சைரஸ் மிஸ்திரியின் மரணம் தொடர்பாக ஒருபக்கம் விசாரணை நடந்து வரும் சூழலில் அவரது கோர விபத்து வாகனம் ஓட்டிகளுக்கு 6 பாடங்களை எடுத்துள்ளது. அதில் முதலாவதாக எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், எப்படிப்பட்ட தருணத்திலும் மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவரையும் வந்தே தீரும். அதை நாம் கணிக்க முடியாது. எனவே வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் நாம் வாழ வேண்டும் என்ற பாடத்தை அது கற்றுத்தருகிறது.
பாடம் 2
சைரஸ் மிஸ்திரியின் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கார் விபத்துக்கான காரணத்தையும் இருவர் உயிரிழந்ததற்கான காரணத்தையும் வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது தெரிகிறது. போக்குவரத்து விதிகள் வெறும் கடமைக்காக போடப்படுவது இல்லை என்றும், அது வாகனம் ஓட்டும் நமது வாழ்க்கை மட்டுமின்றி நம்முடன் சாலையில் பயணிக்கும் மற்ற மக்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்பதையும் உணர்ந்து எத்தகைய இக்கட்டான சூழலிலும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என உணர்த்துகிறது.
பாடம் 3
போக்குவரத்து விதிகள் என அரசால் வகுக்கப்பட்டவற்றில் சில விதிகளை பெரும்பாலானோர் கடைபிடிப்பது கிடையாது. லைசன்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் இருந்தால் மட்டுமே போதும் என்று நினைத்தே பலர் வாகனங்களை ஓட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக வாகனங்களை ஓட்டும் பலருக்கும் இன்னும் போக்குவரத்து விதிகள் தெரியவில்லை. எனவே அரசுகள் ஏழை, பணக்காரர், செல்வாக்கு மிக்கவர் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கற்றுக்கொடுத்து வாகனங்கள் ஓட்டும் தகுதி இருக்கிறதா என்பதை அறிந்த பிறகே ஓட்டுநர் உரிமம் கொடுக்கும்.
பாடம் 4
போக்குவரத்து விதிகளில் கடைபிடிக்க தவறும் முக்கியமான விதிகளில் ஒன்று சீட் பெல்ட். சைரஸ் சென்றது பாதுகாப்பான கார் என்று அழைக்கப்படும் பென்ஸ். அதில் மொத்தம் 4 பேர் பயணித்துள்ளார்கள். அதில் உயிரிழந்த சைரஸ் உள்ளிட்ட இருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள். முன் இருக்கையில் அமர்ந்திருந்து கார் ஓட்டிய பெண் மருத்துவரும் அவரது கணவரும் முறையாக சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவர்கள் ஏர் பலூன்கள் மூலம் தப்பினர். ஆனால், உயிரிழந்த இருவரும் சீட் பெல்ட் அணியாததால் ஏர் பலூன்கள் வேலை செய்யாமல் அவர்கள் உயிரிழந்து உள்ளனர். எனவே அருகில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் உயிர் முக்கியம் என உணர்ந்து சீட் பெல்ட் அணிய வேண்டும்.
பாடம் 5
இதேபோல் மற்றொரு முக்கிய போக்குவரத்து விதிமீறலாக இருப்பது வேகம். நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் சென்ற கார் முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்த முற்பட்டு இருக்கிறது. அப்போது தடுப்பு ஒன்றில் மோதி கார் கோர விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இதுதான். இன்று நகர்புறங்களில் வாகனங்களை ஓட்டும் பலரும் அங்குள்ள சிட்டி ஸ்பீட் லிமிட் என்னவென்று அறியாமல் அதிவேகத்தில் சென்று தங்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களின் உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றனர். வெளிநாடுகளை போல் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை சென்சார் மூலம் கண்டுபிடித்து கடும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாடம் 6
சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு காரணமோ அந்த அளவுக்கு அரசும் காரணமாகிறது. குண்டும் குழியுமான மோசமான சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் முறையாக இயங்காதது, தேவையற்ற இடங்களில் வைக்கப்படும் சாலை தடுப்புகள், போக்குவரத்து காவல்துறையில் புரையோடிக் கிடக்கும் லஞ்சம் போன்றவற்றால் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடந்து விபத்துக்கு வித்திடுகின்றன. எனவே அதுகுறித்தும் அரசுகள் கவனம் செலுத்தி குறைகளை களைய வேண்டும்.