‛111’ போதாது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 புதிய பொறுப்பாளர்கள்.. டப் கொடுக்கும் எடப்பாடி-லிஸ்ட்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக பணிக்குழுவில் புதிதாக 6 பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி இன்று நியமனம் செய்தார். ஏற்கனவே 111 பேரின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் புதிதாக 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு முன்னாள் எம்பி, 2 முன்னாள் அமைச்சர்கள், 3 கழக அமைப்பு செயலாளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவெரா. இவர் கடந்த 2021ல் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

எடப்பாடி ஆலோசனை
இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று 8 மணிநேரம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று 2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வமும் வேட்பாளரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். நிர்வாகிகளுடன் ஆலோசனை, உச்சநீதிமன்றத்தில் மனு என அதிரடி நடவடிக்கைகைள மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

விடாத எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் தற்போது பெரும் குழப்பம் நிலவும் நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற பேச்சு உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கான வியூகங்களை மேற்கொண்டு வருகிறார்.

111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு
இதற்காக தான் அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழுவில் 111 பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதிமுக சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 30 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், 111 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம், செம்மலை, கே.வி.ராமலிங்கம் மற்றும் மு.தம்பிதுரை எம்.பி., தற்போதைய எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிதாக 6 பேர் நியமனம்
இந்நிலையில் தான் தற்போது தேர்தல் பணிக்குழுவில் புதிதாக 6 பேரை பொறுப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார். அதன்படி முன்னாள் எம்பியும், கழக அமைப்பு செயலாளருமான கோபால், மாஜி அமைச்சர்கள் வளர்மதி, பாஸ்கரன், கழக அமைப்பு செயலாளர்களாக மாஜி எம்பி ரத்தினவேல், முன்னாள் எம்எல்ஏ ஆசைமணி, சிவா. ராஜமாணிக்கம் ஆகியோர் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications