நீட் தேர்வில் 61 வயதில் வெற்றி..மருத்துவராகும் கனவோடு வந்த சிவபிரகாசம் - தகுதியிழந்தது எப்படி
61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவபிரகாசம் மருத்துவ படிப்பில் சேர சிவப்பிரகாசம் தகுதியானவர் இல்லை என்று மருத்துவ கலந்தாய்வு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்க இன்று சென்னை வந்தார். அவர் மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர் இல்லை என்று மருத்துவ கலந்தாய்வு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மருத்துவராகும் கனவோடு நீட் தேர்வு எழுதிய அந்த நபரின் பெயர் சிவபிரகாசம். மருத்துவர் ஆக வேண்டும் என சிறுவயதில் லட்சியத்துடன் இருந்த சிவப்பிரகாசம், பியூசி மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால், அவரால் மருத்துவர் ஆக முடியவில்லை. இதற்கும் இரண்டு முறை பியூசி தேர்வு எழுதியிருக்கிறார்.
பிஎஸ்சி விலங்கியல் படித்துவிட்டு, அரசுப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 61 வயதில் நீட் தேர்வு எழுதினார். முதல்முறை எழுதிய உடனேயே வெற்றியும் பெற்று விட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவில் கலந்தாய்விலும் பங்கேற்றார். அதைப்பார்த்து இன்றைய தினம் கலந்தாய்வுக்கு வந்திருந்த பல மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

லட்சியக்கனவு
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் தகிடுதத்தம் செய்து டாக்டருக்கு படிப்பார் கமல்ஹாசன். சிவபிரகாசமோ நேர்மையான முறையில் நீட் தேர்வுக்காக படித்து எழுதி வெற்றியும் பெற்று விட்டார். தனது கனவு நிறைவேறப்போகும் ஆசையில் இருந்த சிவபிரகாசத்தை அவரது மகன் கூறிய ஆலோசனை யோசிக்க வைத்துள்ளது.

நீட் தேர்வில் மதிப்பெண்
நீட் தேர்வில் 249 மதிப்பெண் எடுத்துள்ளார் சிவப்பிரகாசம். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 437 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிவப்பிரகாசத்தின் ரேங்க் 349 ஆகும். சிவபிரகாசத்தின் மகனும் மருத்துவர்தான். கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வரும் சிவப்பிரகாசத்தின் மகன், தனது தந்தையை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்.

மகனின் அறிவுரை
நீங்கள் மருத்துவர் ஆனால் 10- 15 வருடங்கள் தான் மருத்துவராக வேலை பார்க்க முடியும். இதுவே வேறொரு அரசு மாணவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் 40 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று மகன், தந்தையிடம் கூறவே யோசித்தார் சிவபிரகாசம். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியராக, ஒரு மாணவரின் வாய்ப்பைப் பறித்ததற்காக நான் குற்ற உணர்வு கொள்ள விரும்பவில்லை ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்லப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தகுதியானவர் இல்லை
இந்த நிலையில் இன்று நடைபெற்ற கலந்தாய்வில் மருத்துவ படிப்பில் சேர சிவப்பிரகாசம் தகுதியானவர் இல்லை என்று மருத்துவ கலந்தாய்வு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், பியுசி முடித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடமில்லை என்றும் சட்டப்படி சிவப்பிரகாசம் மருத்துவப்படிப்பில் சேர முடியாது எனவும் மருத்துவ கலந்தாய்வு செயலாளர் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற சிவபிரகாசத்தின் கனவு நனவாகாமலேயே போய் விட்டதுதான் சோகம்.












Click it and Unblock the Notifications