சென்னையில் 9 மாத சாலை விபத்துகளில் உயிரிழந்த 74% பேர் தலைக்கவசம் அணியவில்லை
சென்னை: சென்னையில் 9 மாத சாலை விபத்துகளில் உயிரிழந்த 74% பேர் தலைக்கவசம் அணியவில்லை என்பது சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது. 01.01.2021 முதல் 07.09.2021 வரையிலான விபத்து தரவுகளை ஆய்வு செய்ததில், சென்னை மாநகரில் விபத்துக்களில் 659 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகரில் விபத்துக்களையும் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காக சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து விதிகளை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
01.01.2021 முதல் 07.09.2021 வரையிலான விபத்து தரவுகளை ஆய்வு செய்ததில், சென்னை மாநகரில் விபத்துக்களில் 659 பேர் உயிரிழந்திருப்பதும் 3325 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.
3 முன்னாள் அமைச்சர்கள் ஊழல்.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு.. குண்டை தூக்கிபோட்ட பிடிஆர்!
74 சதவீதம் பேர்
இதில் உயிரிழந்தவர்களில் 26% (173) பெரும் காயம் ஏற்பட்டவர்களில் 37% (1214) பேரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் ஆவர். மேலும் இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 74% (126) பேரும் காயமடைந்த 86%(1056) பேரும் தலைக்கவசம் அணியவில்லை என தெரியவருகிறது.
72 சதவீதம் பேர்
இதைத்தொடர்ந்து தலைக்கவசம் அணிவதை வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வு கடந்த ஜீன் மாதம் 2021ல் நடத்தப்பட்டது. இதில் பத்து சந்திப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இருசக்கர வாகன ஓட்டிகளில் 72% பேர் மட்டுமே தலைக்கவசம் அணிகிறார்கள் என்பது தெரியவந்தது.
வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்கும் மணப்பான்மையைக் கொண்டுவரவும், ஆகஸ்ட்-2021 மாதம் முழுவதும் சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், விதிகளை மீறுபவர்கள் மீது அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டது. நடவடிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது 3,58,548 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது அதில் 1,29,240 வழக்குகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது பதியப்பட்டது.
விழிப்புணர்வு அதிகரிப்பு
சென்னை பெருநகர காவல்துறையின் இந்த நடவடிக்கையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 இருந்து 86% ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து உள்ளார்கள் என்ற நிலை ஏற்படும். சென்னை பெருநகர காவல்துறை அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பயணிகளும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்வதற்காக மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயல்படுத்த உள்ளது.
சென்னை மக்கள்
மதிப்புமிக்க மனித உயிர்களை காப்பாற்றவும், விபத்தில்லா சென்னை மாநகரை உருவாக்கவும் சென்னை பெருநகர காவல் துறை மேற்கொண்டுள்ள பணியில் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,