சுதந்திர கனலை எழுத்துக்களால் தெறிக்க விட்ட முண்டாசு கவிஞர் பாரதி..அக்னிக்குஞ்சுகளை உருவாக்கிய மகாகவி
சென்னை: இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார் சுப்ரமணிய பாரதியார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு மிகவும் முக்கியமானது. விடுதலைப் போராட்ட காலத்தில், இவர் எழுதிய பாடல்களும் கவிதைகளும் மக்களுக்குள் தீக்கனலை மூட்டி ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" இவர் போற்றப்பட்டார்.
இந்திய விடுதலை போரில் பாரதியாரின் தனித்துவமான பங்கு குறிப்பிடத்தக்கது. 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சுதந்திர போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு பற்றி இன்றைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் பாரதி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சுப்பிரமணியன். சிறுவயதிலேயே தமிழ் புலைமையோடு காணப்பட்டார்.
பதினொரு வயதிலேயே கவிபாடும் ஆற்றலோடு விளங்கினார். அவரின் கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் பாரதி எனவே பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டார். சிலர் அவரை சுப்பிரமணிய பாரதி என அழைத்தனர்.
தமிழ் மொழியின் மீது பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அதனால்தான். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் புலமை பெற்றிருந்தார். அவர் எழுதிய கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற காவியங்களை எழுதியுள்ளார்.
1897ம் ஆண்டு செல்லம்மாவை கரம் பிடித்த பாரதி வறுமையிலும், அவர் தன்னுடைய தமிழ் பற்றை விடவில்லை. அதனால் மீசை கவிஞன் எனவும் முண்டாசு கவிஞன் எனவும் அவர் அழைக்கப்பட்டார். தந்தையின் இறப்புக்குப் பின்னர் ஏழ்மையில் இருந்த பாரதியார் காசிக்கு சென்று தங்கினார். பின்னர் அங்கிருந்து திரும்பி எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
நாட்டு விடுதலைக்காக தனது எழுத்துக்களை பயன்படுத்தினார். பேனாவில் நெருப்பை ஊற்றி எழுதி மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டியவர் பாரதி. சுதந்திர போராட்ட தீ அவருக்குள் காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் பற்றி எரிந்தது. அதை தனது பத்திரிக்கை, இலக்கியம், பாட்டு, கவிதை வடிவில் விடுதலை உணர்வை அவர் மக்களிடையே ஏற்படுத்தினார். அவரின் எழுச்சி வரிகளுக்கு தமிழகத்தில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட ஆங்கிலேய அரசு அவரின் இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது. அதேபோல், பாரதியை கைது செய்து சிறையிலும் அடைத்தது. ஆனாலும், எதற்கும் அஞ்சாமல் அவர் தொடர்ந்து சுதந்திர உணர்வுகளை தனது படைப்புகள் மூலம் மக்களிடையே அவர் பரப்பி வந்தார்.
புதுச்சேரியில், அரவிந்தர், லாலா லஜபத் ராய் மற்றும் வி.வி.எஸ்.ஐயரை பாரதி சந்தித்தார். அவர், வேத இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார் மற்றும் வேதம், பகவத் கீதை, பதஞ்சலியின் யோக சூத்திரத்தை தமிழுக்கு மொழி பெயர்த்தார். 1918 ல், பாரதி புதுச்சேரியில் இருந்து, கடலூருக்குள் நுழைந்த போது, அவர் கைது செய்யப்பட்டார். சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திர தாகத்துடன், "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று பாடினார்.
சாதி மதம் என பிரிந்து, தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு இருந்த மக்களை தன் கவிபாடும் திறமையினால் கட்டியிழுத்து ஒற்றுமை உணர்வை அவர்களிடம் விளைய வைத்தவர் பாரதி. "ஆயிரம் உண்டு இங்கு சாதி.. எனில் அந்நியர் வந்து புகழ் என்ன நீதி" என்று கேட்டவர் பாரதியார். நாமெல்லாம் ஒர் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் சண்டையிட்டு கொண்டாலும் நாமெல்லாம் சகோதரர் என்று ஒற்றுமைப்படுத்தினார்.
தனது கூர் வாள் போன்ற வலிமையான சொற்கள் மூலமாக, பல்லாயிரம் இளைஞர்களை, தேச பக்தியின் பாதையில் விரும்பியே செல்ல வைத்தார். சுதந்திர இந்தியாவின் சுந்தர கனவுகளை காட்டி, லட்சக்கணக்கான மக்களை, பாரத தேசத்தின் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்க வைத்தவர் சுப்ரமணிய பாரதி.
இளம் வயதிலேயே மரணம் அவரை நோக்கி வந்தது. 1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் உள்ள யானையால் தூக்கி எறியப்பட்டு நோய்வாய்பட்ட அவர், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி தனது 39வது வயதில் மரணமடைந்தார். "காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்" என்று எமனையே எதிர்த்து பாடியவர் பாரதி.
அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் மக்களிடையே இன்னும் எழுச்சியான உணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
75வது சுதந்திர தினம்..பிரதமர் மோடியால் அதிகரித்த தேசியக்கொடி விற்பனை.. பூரிப்பில் வியாபாரிகள்!