சுதந்திர தினம் : கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம் உருவாக உறுதியேற்போம் - டாக்டர் ராமதாஸ்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர தினவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கொரோனா பரவல் காலம் என்பதால் விழாவை கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மாநில அரசுகளும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை கோட்டையில் 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டை முழுவதும், நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு உள்பட பேருந்து நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக 13 கடலோர மாவட்டங்களிலும் கடலோரக் காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறை அறிவித்து உள்ளது.
75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழும் இந்தியாவின் 75ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை அடைந்த இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. நிலவுக்கு விண்கலம் அனுப்பி விட்டது. போர்ப்படை அணிகளை தலைமையேற்று வழிநடத்தும் வீராங்கனைகளைக் கூட உருவாக்கியிருக்கிறோம். ஆனால், வறுமையை ஒழித்திருக்கிறோமா? அனைவரும் ஒரு தாய் மக்கள்; நாம் இந்தியத் தாயின் பெருமைமிகு பிள்ளைகள் என்று பெருமிதம் கொள்கிறோம்; ஆனால், அவை நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகியிருக்கின்றனவா? பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் விரட்டியடிக்கப்பட்டு சமத்துவமும், சகோதரத்துவமும் நாட்டில் நிறைந்திருக்கின்றனவா?
அவை சாத்தியமாகவில்லை என்றால் இந்தியா விடுதலையடைந்து 75-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று பெருமைப்படுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என்பதற்கான அடையாளங்கள் சமத்துவம், சமூகநீதி, வறுமையின்மை, வேலையில்லாத் திண்டாட்டமின்மை ஆகியவை தான். இந்த நிலையை எட்டினால் தான் இந்தியா உண்மையான முதிர்ச்சியடைந்த ஜனநாயகமாக மாறும்.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications