'குலத் தொழில்' விமர்சனத்துக்குள்ளான பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் - தமிழ்நாட்டில் 9,246 பேர் பதிவு
சென்னை: குலத் தொழில் திணிப்பு என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிற பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை 9,246 பேர் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் பயன்பெற 16.10.2023 வரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்..

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 17.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 895பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1061 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டம் 17.09.2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விஸ்வகர்மா திட்டம்: கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் பாரம்பரிய திறன்களின் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதும், வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும். கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும்.












Click it and Unblock the Notifications