அப்புறம் ஏன் ஆ.ராசா, திருமா, சீமான் விளாசாமல் இருப்பாங்க? சின்மயா மிஷன் புத்தகத்தால் சர்ச்சை
சென்னை: சின்மயா மிஷன் தயாரித்துள்ள 6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு தகவல் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மனுஸ்மிருதி, மனுதர்மம், இந்து சூத்திரன் விவகாரத்தை சின்மயா மிஷன் பாடப் புத்தகம் கிளப்பிவிட்டுள்ளது.
சென்னையில் பேசிய திமுக மூத்த தலைவர் ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.
மாணவர்களுக்கும் 1000 கொடுங்க.. என்ன பாவம் செஞ்சாங்க..? பாகுபாடு வேண்டாம்.. உதயகுமார் வைத்த கோரிக்கை!
சீமான் காட்டம்
இதனைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது என்றார்.
தலைவர்கள் ஆதரவு
அத்துடன் பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது என்றார். இதே கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.
வர்ணாசிரமம்
இத்தகைய கருத்துகளுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியது. பாஜக சார்பில் போலீஸ் நிலையங்களில் புகாரும் கொடுக்கப்பட்டது. இந்த பின்னணியில்தான் சின்மயா மிஷன் பாடப் புத்தகம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதில், மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பிராமணர்கள் ,சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனும் 4வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதாம்.
அம்பேத்கர், கலாம் என்ன வர்ணம்?
அத்துடன் நிற்காமல், வர்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்கிற கேள்வியும் கேட்கப்பட்டிருந்ததாம் சின்மயா மிஷன் புத்தகத்தில். இப்புத்தகத்துக்கு ரேடியன்ட் பாரத் எனவும் பெயரிடப்பட்டுள்ளதாம். சென்னை குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளிதான் இந்த புத்தகங்களை பயன்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.