உருவானது 'புதிய புரட்சி கழகம்'.. தலைவர் யார் தெரியுமா? இரண்டாக உடைந்த பூவை ஜெகன்மூர்த்தி கட்சி
சென்னை: லோக்சபா தேர்தலில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி ஆதரவளித்திருந்த அதிமுக தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், அக்கட்சியின் காஞ்சி மாவட்ட தலைவராக இருந்த ஓதியூர் சங்கர், இன்று அக்கட்சியில் இருந்து விலகி 'புதிய புரட்சி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியாக இருந்த அதிமுக கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது. வாக்கு சதவிகிதம் 1 சதவிகிதம் உயர்ந்திருந்தாலும், பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

முன்னதாக இந்த தேர்தலில் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவளித்திருந்தது. இக்கட்சிக்கு சீட் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றாலும் கூட, பூவை ஜெகன் மூர்த்தி அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இருப்பினும் அதிமுக தோல்வி கட்சிக்குள் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் எதிர் வரிசையில் இருக்கின்றவர்கள் 40 தொகுதிகளில் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதுடன், எதிர்பார்த்த அளவுக்கு வாக்கு சதவீதமும் இல்லை. அதிலும் காங்கிரசின் தலைமையில் இருக்கின்ற இந்திய கூட்டணி காங்கிரசும் பெரும்பான்மை அடையவில்லை. அப்படியே வெற்றி பெற்றிருந்தாலும் இது பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் ஆட்சியில் நாம் தான் அமர்வோம் என்றும் யாருக்கு என்னென்ன இலக்கா என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கனவு கண்டு இருந்தவர்களின் கனவு தகர்ந்திருக்கிறது.
மீண்டும் பாஜகவின் கூட்டணி வென்று ஆட்சி அமைக்க இருக்கின்ற இந்த சூழலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தயாராக இல்லை. தேசிய அளவில் பட்டியலின மக்களுக்கு கிடைக்க இருக்கின்ற அத்தனை சலுகைகளையும் நிறுத்துகின்ற ஒரு சூழல் யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தொடர்ந்து வருவதாகவும் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்கின்ற பாஜக அரசுக்கும் பட்டியலின மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது புரட்சி பாரதம் கட்சியிலிருந்த விலகிய காஞ்சி மாவட்ட தலைவராக இருந்த ஓதியூர் சங்கர் 'புதிய புரட்சி கழகம்' எனும் கட்சியை தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications