குடிகொண்ட குழந்தை சிரிப்பு! அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட ஆணை! வேலம்மாள் பாட்டிக்கு கிடைத்தது வீடு!
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலம்மாள் பாட்டி தனக்கு வீடு வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கான ஆணையை பாட்டியிடம் அதிகாரிகள் வழங்கினார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா இரண்டாம் கட்டத்தில் தமிழக அரசால் தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ. 2,000 மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதியைச் சேர்ந்த 90 வயது பாட்டி வேலம்மாள், அரசு வழங்கிய நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருள்களை பெற்றுக்கொண்டார்.

வேலம்மாள் பாட்டி
கைகளில் பணம் மற்றும் மளிகைப் பொருட்களுடன் வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியில் பொக்கை வாய்காட்டி சிரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது. பலரும் அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பகிர்ந்திருந்தார். இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு' எனக் குறிப்பிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவற்றை சரி செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கி, அந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவில் சென்ற போது வேலம்மாள் பாட்டியை சந்தித்து பேசினார்.

பாட்டியின் கோரிக்கை
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலம்மாள் பாட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு வீடியோ மூலம் கோரிக்கை ஒன்றினை விடுத்து இருந்தார். அதில் தனக்கு வசிக்க வீடு இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் தனக்கு வீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டிருந்தார். வேலம்மாள் பாட்டியின் கோரிக்கை குறித்து ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து வேலம்மாள் பாட்டியைச் சந்தித்த அதிகாரிகள் பாட்டிக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியிருந்தனர்.

வீடு வழங்கப்பட்டது
இதனிடையே வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கான ஆணையும் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. வேலம்மாள் பாட்டியின் கோரிக்கை விடுத்த செய்தியை அறிந்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு பேசிய அவருக்கு வீடு ஒதுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கான ஆணையை பாட்டியிடம் வழங்கினார்கள். மேலும் குடிசை மாற்றுவாரியத்துக்கு பயனர்கள் வழங்க வேண்டிய ரூ.76,000 நிதியையும் பாட்டியால் வழங்க முடியாது என்பதால் அதையும் அரசே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications