ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தை மிரட்டி ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக கெவின் கைது
சென்னை: சென்னையை சேர்ந்த ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தை மிரட்டி ரூ50 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக கெவின் என்பவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகி புருஷோத்தம் குமார், சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், ஜி ஸ்கொயர் உரிமையாளர் ராமானுஜத்தை ஜனவரி 18-ந் தேதி இரவு கெவின் என்பவர் தொடர்பு கொண்டார். தமக்கு ரூ50 லட்சம் வழங்காவிட்டால் முன்னணி செய்தி நிறுவன இதழ்களில் ஜி ஸ்கொயர் குறித்து அவதூறாக கட்டுரைகள் வெளியிட செய்வேன் என கெவின் மிரட்டினார்.
மேலும் ஊடகங்களில் ஜி ஸ்கொயர் குறித்து அவதூறு செய்திகள் வெளியிடப்பட்டன. பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட கெவின், மாதம் ரூ50 லட்சம் வழங்காவிட்டால் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்கள் சிலர் மூலம், இத்தகைய அவதூறுகள் வெளியிடப்படும் என மிரட்டினார், என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார் கெவினை கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் பகுதியில் கெவின் தங்கி இருந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம் கெவினை கைது செய்தனர்.