சென்னை மயிலாப்பூரில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து திருடிய இளம் பெண்.. தர்ம அடி
சென்னை: சென்னை மயிலாப்பூரில் குடிக்க தண்ணீர் கேட்பது போல் வீடுபுகுந்து பீரோவில் இருந்து நகை திருடிய இளம் பெண்ணை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை மயிலாப்பூர் வி.சி.கார்டன் பகுதியில் வசிப்பவர் அன்பழகன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் நேற்று மாலை அன்பழகனின் மனைவி மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளம்பெண், ''தாகமாக இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும்,'' என்று கேட்டிருக்கிறார். அப்போது அன்பழகன் மனைவி தண்ணீர் எடுத்து வர சமையலறைக்கு சென்றிருக்கிறார். படுக்கை அறைக்குள் நுழைந்த இளம்பெண் பீரோவை திறந்து, அதிலிருந்த நகைகளை எடுத்து கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அத்துடன், அந்த இளம் பெண்ணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், பொதுமக்களிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டார்கள்.. விசாரணையில், யானைகவுனி பகுதியை சேர்ந்த லட்சுமி (33) என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் லட்சுமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications