வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு.. ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த சென்னை, தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது. இப்பணிகளை 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென '6 பி' என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது.
அன்று தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலும், தொடர்ந்து, மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடக்க உள்ளன.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அளித்த அறிவுரைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, ஆகஸ்டு 1ம் தேதி முதல் இதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், ஆதார் நம்பரை 6பி என்ற விண்ணப்பத்தின் மூலம் வாக்குப்பதிவு அலுவலரிடம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக வீடு, வீடாக வாக்குப்பதிவு அலுவலர்கள் சென்று விவரங்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹு, ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் ஆதார் எண் இணைப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளம்பரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தவிட்டுள்ளது. அதோடு, மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி கூட்டத்தை நடத்தி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்தி, அவர்களின் கருத்துக்களையும் பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்.
இதற்கிடையில் வருகிற செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் திருத்தம், 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயர்களை புதிதாக சேர்க்கும் பணிகள் வழக்கம்போல் தொடங்கும். அப்போது நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் இந்த 6பி படிவம் பெறப்பட்டு, ஆதார் நம்பர் இணைக்கப்படும். சென்னையில் 3,750 வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தொடங்குகிறார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications