சுப்ரபாத சேவை.. ஏழுமலையானிடம் மனமுருகி வேண்டிய நடிகர் ரஜினிகாந்த்.. மகள் ஐஸ்வர்யாவுடன் சாமி தரிசனம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். மகள் ஐஸ்வர்யா உடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், ஆறு ஆண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதுதவிர அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் என்கிற திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
டிசம்பர் 12ஆம் தேதியன்று பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்திக்கவில்லை படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார். இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யா உடன் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்திருந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருமலையில் இரவு தங்கிய அவர் இன்று அதிகாலையில் மகள் ஐஸ்வர்யா உடன் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தலைவா, தலைவா என்று கோஷம் போட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர் ஆறு ஆண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறினார்.
அப்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவருக்கு நேற்றே வாழ்த்து தெரிவித்து விட்டேன். சாமி கும்பிட வந்த இடத்தில் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரியும் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் "கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

இந்த சேவையை தரிசிக்க முன்பதிவு அவசியம் இதற்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும். இந்த சுப்ரபாத சேவை தரிசனத்தில் இன்றைய தினம் ரஜினிகாந்த் பங்கேற்று மகளுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரபாத சேவையை தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கட்டணத்துடன்கூடிய காசோலையை மூன்று மாதங்களுக்கு முன்பாக அனுப்பி, தங்களது பெயரைப் பதிவுசெய்துகொண்டும் பெறலாம். ஆனால், இவையெல்லாமே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும். ஒருவேளை உங்களுக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படாவிட்டால், உங்களின் காசோலை உங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும்.
சுப்ரபாத தரிசனத்தைப் பெற இன்னொரு வழிமுறை, 'லக்கி டிப்' என்னும் குலுக்கல் முறை வாய்ப்பு. இதற்கும் ஆன்லைனில்தான் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.tirumala.org இணையதளத்தின் வழியாக அறியலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதத்திற்கான சேவை மற்றும் தரிசன டிக்கெட்களை ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை வழங்கி வருகிறது. அதே போல் ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்கள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் ஆர்ஜித சேவை எனப்படுகின்றன. முதலில் வந்து, முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட்களை வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications