நடிகர்கள் அறிஞர் இல்ல.. சோறு போடுங்க.. தலையில் வெச்சு கொண்டாடாதீங்க -சிந்திக்க வைத்த சத்யராஜ் பேச்சு
சென்னை: நடிகர்களுக்கு ரசிகர்கள் சோறு போட வேண்டும் என்றும், அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் எனவும், ஒரு நடிகருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க வேண்டாம் என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்து உள்ளார். நடிகர்கள் யாரும் பெரியாரோ, மார்க்சோ, அம்பேத்கரோ அல்ல என்று அவர் விளக்கமளித்து இருக்கிறார்.
விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நடித்த வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி ஒன்றாக வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களாகவே இந்த திரைப்படங்கள் தொடர்பான பேச்சுக்களும், ரசிகர்களுக்கு இடையிலான வாக்குவாதங்களும் பேஸ்புக், ட்விட்டரை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
காலரை தூக்கி விட்டு சொல்றேன்.. “அந்த சிரிப்பு இருக்கே..” முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த சத்யராஜ்!
எல்லை மீறும் ரசிகர்கள்
தங்களுக்கு பிடித்த நடிகர்களையும் அவர்களின் திரைப்படங்ளையும் கொண்டாடி போஸ்டர், பேனர், கட் அவுட் வைத்து ரசிகர்கள் வரவேற்றனர். முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டபோது ரசிகர்கள் கொண்டாட்டம் எல்லை மீறியதால் சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் கீழ் தரமாக விமர்சித்து வருவது பலரை முகம் சுளிக்க வைத்து இருக்கிறது.
அஜித் ரசிகர் மரணம்
குறிப்பாக சென்னையில் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே 18 வயது அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்களின் தீவிர மனப்பான்மையை பலரும் விமர்சித்து இளைய தலைமுறையின் மீதான தங்களின் வேதனையைப் அவர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகர் சத்யராஜ் பேட்டி
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசுகையில், "நீங்கள் ஒரு நடிகருக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதீர்கள். நடிக்கத்தான் தெரியும். சமூகத்தில் இருக்கும் மிகப்பெரிய தவறு, நடிகர்களை நீங்கள் ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைப்பதுதான். இல்லை.
தலையில் வைத்து கொண்டாடாதீர்கள்
எங்களுக்கு அதிகம் தெரியாது. ஆசிரியர், மனநல மருத்துவர், சமூக ஆர்வலருக்கு எங்களை விட அதிகம் தெரியும். நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கிறீர்கள். நான் ஒரு சாதாரண நடிகன். தற்கொலைக்கான காரணத்தை மருத்துவர் சொல்வார். ஏன் எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்? நாங்கள் சும்மா நடிப்போம். ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்ஷன்.. என்று சொன்னால் டான்ஸ் ஆடுவோம்.
நாங்கள் தலைவர்கள் அல்ல
சண்டை போடுவோம். ஊடகங்கள் மீது இருக்கும் பெரிய வருத்தம் என்னவென்றால், எங்களுக்கு சோறு போடுங்கள். தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். தயவு செய்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் யாரும் பெரியாரோ, மார்க்சோ, அம்பேத்கரோ மாபெரும் அறிஞரோ அல்ல. மனநலம் பற்றி ஒரு நடிகரிடம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் மனநல நிபுணரிடம் பரதநாட்டியம் குறித்து பேசுவீர்களா? என்னிடம் வாயை பிடுங்க முடியாது." என்றார்.