வருமானத்தை மறைத்த விவகாரம்: நடிகர் விஜய்க்கு எதிரான வழக்கில் நாளை ஐகோர்ட் தீர்ப்பு! பரபரப்பு!
சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி, நடிகர் விஜய்க்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நாளை வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தல் நெருங்கும் சூழலில் விஜய் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016 - 2017 ஆம் நிதியாண்டில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வருமான வரி தாக்கலின் போது 35.42 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தெரிவித்திருந்தார். இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தபோது கைப்பற்ற ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என்று கண்டறியப்பட்டது. அதாவது, 'புலி' திரைப்படத்திற்காக விஜய் பெற்ற ஊதியத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறியப்பட்டது. எனவே வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஜூன் 30 ஆம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு அபராதம் செலுத்த கோரி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கால வரம்பை மீறி வருமானவரித்துறை 2022 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதனால் அந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
வருமான வரித்துறை சார்பில், சட்டப்பிரிவு 271 AAB(1) படி தான் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி செந்தில்குமார் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவராக இருக்கும் நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் விஜய் தொடர்பான வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications