விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு.. அப்பா ஒன்று சொல்ல.. அவசர அவசரமாக விளக்கிய மகன்.. என்ன நடக்கிறது?
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக நேற்று இயக்குனர் சந்திரசேகர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நிலையில் நடிகர் விஜய் தரப்பு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் இந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இதற்காக ஏற்கனவே விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
கடந்த வாரம் விஜய் மக்கள் இயக்க செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த மீட்டிங்கில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இதில் விஜய்யின் புகைப்படம், மக்கள் இயக்க கொடி இரண்டையும் பயன்படுத்திக்கொள்ள நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்
இந்த நிலையில்தான் சரியாக நேரம் பார்த்து விஜய் தனது அப்பா சந்திரசேகர் மற்றும் மற்ற சில நிர்வாகிகளுக்கு எதிராக தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கடந்த வருடம் விஜய்யின் ரசிகர்களை வைத்து அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப்பட உள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் நடிகர் விஜய்க்கும் இந்த அறிவிப்பிற்கும் தொடர்பு கிடையாது.

அறிவிப்பு
விஜய்யிடம் அனுமதி கேட்காமல் அவரின் பெயரை பயன்படுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டதாக விஜய்யின் தரப்பில் கூறப்பட்டது. விஜய்யின் அப்பா மூலம் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. விஜய் தரப்பில் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. என்னுடைய பெயரை யாரும் என் அனுமதி இன்றி பயன்படுத்த கூடாது என்று வழக்கு தொடுத்தார். தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி விஜய் வழக்கு தொடுத்தார்.

நேற்று விசாரணை
நேற்று இந்த வழக்கில் நடந்த விசாரணையில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சந்திசேகர் தரப்பு கோர்ட்டில் தெரிவித்தது. பிப்ரவரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த இயக்கத்தை கலைத்துவிட்டோம் என்று எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை என்று அவர் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

தேர்தல்
தேர்தலுக்கு மனு எல்லாம் தாக்கல் செய்து விட்டோம்.. இப்போது போய் மக்கள் இயக்கம் இல்லை என்று கூறினால் என்ன நியாயம் என்று பலர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து விஜய் தரப்பில் அவசர அவசரமாக இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், விஜய் மக்கள் இயக்கம் இப்போதும் இருக்கிறது. நான் தொடங்கிய இயக்கத்தை யாரும் கலைக்கவில்லை. இயக்குனர் சந்திரசேகர் தொடங்கிய இயக்கம்தான் கலைக்கப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

விளக்கம் குழப்பம்
மக்கள் இயக்கம் கலைப்பு என்ற செய்தியால் குழம்பி போன நிர்வாகிகள், ரசிகர்கள் இதனால் நிம்மதி அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மூத்த பிரபலங்கள், அதிலும் தந்தை மகன் இப்படி மோதிக்கொண்டது இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக சந்திரசேகர் கூறி இருப்பதால் இருவருக்கும் இடையிலான மோதல் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications