மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் தர கடும் எதிர்ப்பு - தீர்ப்பை தள்ளி வைத்த ஹைகோர்ட்
மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: மணிகண்டன் சாட்சியை கலைத்துவிடுவார், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் தரக்கூடாது என காவல்துறை தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கைது செய்ய தடை
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூன் 9ஆம் தேதி வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. முன்னாள் அமைச்சரின் முன் ஜாமீன் மனு, நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
திருமணமானவர் என தெரியும்
அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 12 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றி, பின் அரசியலுக்குள் நுழைந்துள்ளார் மணிகண்டன். புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை பொறுத்தவரை திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளார்.
நற்பெயருக்கு களங்கம்
நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நடிகையை தெரியும் என்றும் புகைப்படங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்... இடைக்கால பாதுகாப்பாக முன் ஜாமீன் வழங்க வேண்டும்.
முகாந்திரம் இல்லை
காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது. கரு உருவாகும் முன் எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும்.
உதைத்ததாக புகாரிலும் கூறப்படவில்லை. கருவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டும். விசாரிக்கட்டும், நான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் வேண்டும்
திருமணமாகாதவன் என்று அவரிடம் கூறவில்லை. அது அவருக்கும் தெரியும். அதனால் அவரை நம்ப வைத்து ஏமாற்றியதாக கூற முடியாது. எந்த மிரட்டலும் விடுக்கவில்லை. ஏப்ரல் 15 வரை மணிகண்டனுடன் வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எனவும் மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
ஏமாற்றிய அமைச்சர்
அரசுத்தரப்பிலான வாதத்தில் 2017ல் பரணி என்பவர் மூலம் மணிகண்டனுக்கு நடிகை அறிமுகம் ஆகியுள்ளார். நடிகை சாந்தினி, மலேஷியாவின் தென் மாநில தூதராக உள்ளார். மலேஷியாவில் முதலீடு தொடர்பாக சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றியுள்ளார்.
வாக்குமூலம்
கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துள்ளார். உதைத்ததால் படுகாயமடைந்துள்ளார். விசாரானை ஆரம்பநிலையில் உள்ளது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது... சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
முன் ஜாமீன் தரக்கூடாது
மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று முறை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது. முக்கிய பதவியை வகித்ததால் சாட்சிகளை கலைக்க கூடும் என வாதிடப்பட்டது.
ஒப்புதல் அளித்தது ஏன்
சாந்தினி தரப்பில், திருமணம் செய்து கொள்வதாக தோற்றத்தை ஏற்படுத்தியதால் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹைகோர்ட் ஒத்திவைப்பு
முதலில் சாந்தினி யார் என தெரியாது என கூறியவர், பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளதாக வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.