ஒன்வேயில் எதிர் திசையில் சென்ற உயரதிகாரியின் வாகனம்.. ஃபைன் போட்டு எச்சரித்த சென்னை போலீஸ்! அதிரடி!
சென்னை : சென்னையில் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் சென்ற ஏடிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியின் வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி திருவான்மியூரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 3 ஸ்டார் அந்தஸ்து கொண்ட அதிகாரியின் வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்வேயில் எதிர் திசையில் பயணித்த வாகனம் குறித்து சென்னை காவல்துறையை டேக் செய்து ட்விட்டரில் ஒருவர் ஒருவர் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் அந்த வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்
சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறையினர் புதிய அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர். ஆனால், போக்குவரத்து விதிகளை காவல்துறையினரே பின்பற்றுவதில்லை, பொதுமக்களுக்கு மட்டும் அதிக அபராதமா என வாகன ஓட்டிகள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

ஒன்வேயில் போலீஸ் வாகனம்
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி, சென்னை திருவான்மியூரில் 3 ஸ்டார் கொண்ட ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அலுவல்பூர்வ காவல்துறை வாகனம் ஒன்று ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் பயணித்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்களில் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு சென்னை காவல்துறையையும் டேக் செய்திருந்தார்.

அபராதம் விதித்த காவல்துறை
இதையடுத்து, போக்குவரத்து விதியை மீறி ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் பயணித்த அந்த ஏடிஜிபி லெவல் அதிகாரியின் வாகனத்துக்கு அபராதம் விதித்துள்ளது சென்னை பெருநகர காவல்துறை. மேலும், அந்த வாகனத்தில் அப்போது அந்த அதிகாரி இல்லாத நிலையில், ஓட்டி வந்த காவலருக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடவடிக்கை எடுத்தாச்சு
போலீஸ் வாகனம் விதிமீறலில் ஈடுபட்டதை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் புகார் அளித்தவருக்கு பதிலளித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையும், காவலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, சலானையும் இணைத்துள்ளது.












Click it and Unblock the Notifications