ஆதி திராவிடர் -பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை! பிப்ரவரி முழுவதும் விண்ணபிக்கலாம்!
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற இம்மாதம் முழுவதும் விண்ணபிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரக் கூடும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு.. ஓபிஎஸ் யாரை அறிவிப்பார்?
கல்வி உதவித் தொகை
முதலமைச்சர் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையிலும் விளிம்பு நிலை மக்கள் தங்கள் பொருளாதாரத்தில் முன்னேற கல்வியே சிறந்த உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கத்துடனும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கருக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சீரியமுறையில் செயல்படுத்தி வருகிறார்.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை
அதில், ஒன்றிய அரசால் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும், மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் தலையாய திட்டங்களாகும். போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்கள் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
இணையதளம் முகவரி
இத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாணாக்கர் கீழ்காணும் ஒன்றிய அரசின் இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆதிதிராவிடர் மாணாக்கர் https://scholarships.gov.in/public/schemeGuidelines/3064_G.pdf பழங்குடியினர்
மாணாக்கர் https://tribal.nic.in/writereaddata/Schemes/EDUPostMatricScholarshipPMSforSTstudents230513.pdf 2022-2023 ஆம் ஆண்டு முதல் இத்திட்டங்களை செயல்படுத்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் மாணவர்கள்
தற்போது போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் மாணாக்கர் விண்ணப்பிக்க 30.01.2023 அன்று கல்வி உதவித்தொகை இணையதளம் திறக்கப்பட்டு 28.02.2023 நாள் வரை சுமார் பத்து லட்சம் மாணாக்கரின் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
பயன் பெறுமாறு அழைப்பு
எனவே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆதார் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் விண்ணப்பித்து போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அயராது பாடுபடும்
முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்று, தற்போது புதுப்பித்தல் (Renewal students) இனங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணாக்கரும் கட்டாயம் இவ்விணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்வரும் காலங்களிலும், இத்திட்டங்களின் கீழ் பயன் பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கரின் எண்ணிக்கையை உயர்த்தவும் மற்றும் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், கல்வி உதவித்தொகை திட்டங்களில் புதிய திட்டங்களை கொண்டு வர இவ்வரசு அயராது பாடுபடும்.