அந்த வழக்கு இல்லயே.. தீர்ப்பை பார்த்து தூக்கம் வரலனு நீதிபதி சொன்னார்.. கன்ஃபியூஸ் ஆன ஜெயக்குமார்!
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, இன்னொரு வழக்கை சுட்டிக்காட்டி அதன் தீர்ப்பு இது எனக் கூறி குழப்பினார்.
2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது.

பொன்முடிக்கு சிறை: அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காரணமாக, அவர் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்துள்ளார். இந்நிலையில், பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை- பதவி பறிபோனது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன?
குழம்பிய ஜெயக்குமார்: அப்போது பேசிய ஜெயக்குமார், இந்த வழக்கு அப்பீல் வரும்போது, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு என்னால் இரவில் தூங்க முடியவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்தார் எனக் கூறினார். அப்போது, நெறியாளர் குறுக்கிட்டு, அந்த வழக்கு வேறு, இது வேறு எனக் கூறினார். எனினும், ஜெயக்குமார் அதனை ஏற்காமல், நான் சொல்லும் வழக்குதான் இது, அந்த அடிப்படையில் தான் தீர்ப்பு வந்துள்ளது என வாதிட்டார்.
1996 முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இறுதியில் கடந்த ஜூன் 28ம் தேதி போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போதுதான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை படித்து தூக்கம் வரவில்லை எனக் கூறினார்.
ஆனால், இப்போது வந்துள்ள தீர்ப்பு என்பது, 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டு, அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது என ஜெயக்குமாருக்கு விளக்கப்பட்டது.
சமாளிப்பு: இதையடுத்து, “ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஊழல் சாம்ராஜ்யமாக இருக்கும்போது பல வழக்குகள் இருப்பதால் எல்லோரும் குழம்பும் சூழல் இருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை இது ஜெயில் காலம். இப்போது ஒரு விக்கெட் விழுந்திருக்கிறது. அடுத்தடுத்து பல விக்கெட்டுகள் விழும்” எனக் கூறி சமாளித்தார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications