'நான் முன்ன மாதிரி இல்லைங்க மாறிட்டேன்.. இப்போ அரசியல் பக்குவம் வந்துடுச்சு..' ராஜேந்திர பாலாஜி
சென்னை: முன்பு சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன் என்றும் தற்போது தான் அரசியலில் பக்குவமாகச் செயல்பட்டு வருகிறேன் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. மோடி எங்கள் டாடி என தொடங்கி இவரது பல பேச்சுகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த காலங்களில் சவாகிசட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் தங்க பாண்டியனிடம் சுமார் 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

கொரோனா பாதிப்பு
அமைச்சராக இருந்தபோது பல சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி தனக்கு இப்போது அரசியல் பக்குவம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.

வதந்திகளை நம்ப வேண்டாம்
கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன். சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன். செயல்பட்டும் வருகிறேன்.

வருத்தம்
சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் கழகத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், மூன்றாவது நீதிபதி சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க்படுகிறது.












Click it and Unblock the Notifications