2 முன்னாள் எம்.எல்.ஏக்களை தட்டித் தூக்கிய திமுக.. கலகலத்த டெல்டா அதிமுக.. ஷாக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ்!
சென்னை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலைவீசி வருகின்றன.
அந்தவகையில், சமீபகாலமாக முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

அதிருப்தியில் நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் திமுகவில் சேர்ந்தனர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் யாரும் திமுகவில் சேரவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவில் கட்சிக் குழப்பம் பெரிய அளவில் இருந்து வருகிறது.

மாற்றுக்கட்சிகளுக்கு
ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பில் இருந்தும் பலர் அணி மாறி செயல்பட்டு வருகின்றனர். அதிகாரப் போட்டியால் கட்சி நிலைகுலைந்துள்ளதால் அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் மாற்றுக் கட்சிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தார்.

2 அதிமுக எம்.எல்.ஏக்கள்
நான்கு மாதங்கள் கடந்த பின்னும் அதிமுக மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக ஆகிய கட்சிகள் போட்டி போட்டு வலைவீசி வந்தன. இதில் தான் தற்போது இரண்டு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் சாய்ந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 2 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

திமுகவில் இணைந்த நிர்வாகிகள்
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுகவைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஏ.சி.என்.விஜயபாலன், சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏ து.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நாகை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான செம்பை த.சண்முகம், அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம்.ரமேஷ், செம்பனார்கோவில் செல்வராஜ், சுரேஷ்குமார், சரவணன் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

நாகை திமுக
நாகை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் ஏற்பாட்டில், அதிமுகவைச் சேர்ந்த 2 முன்னாள் எம்.எல்.ஏக்களும் திமுகவில் இணைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் 2 மாஜி எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு தாவியுள்ளது ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளதால், நாகை மாவட்டத்தில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications