ஒருவேளை அப்படி நடந்துட்டா? நோ நெவர்.. பிளானை மாற்றிய எடப்பாடி டீம்- எச்சரிக்கையாக வெளியிலேயே வைத்து?
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எந்த வகையிலும் சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக திறந்த வெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக திருமண மண்டபத்திற்கு வெளியே உள்ள திறந்த வெளியில் பந்தல் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன.
அதிமுக பொதுக்குழு..எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பதில்தர சென்னை நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டம், ஓபிஎஸ் தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பி அவமதித்தனர். மீண்டும் பொதுக்குழு நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறினார் ஓபிஎஸ்.
அவமதிக்கப்பட்ட ஓபிஎஸ்
பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் காகிதங்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஓபிஎஸ்ஸின் கார் டயரும் பஞ்சர் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பொதுக்குழுவில் பங்கேற்ற ஓபிஎஸ் எடப்பாடி ஆதரவாளர்களால் அவமதிக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்த நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.
மகுடம் சூடும் எடப்பாடி
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்தி, அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்வதில் உறுதியாக உள்ளனர். மேலும், ஓபிஎஸ் வகித்து வரும் பொருளாளர் பதவியில் இருந்தும் அவரை நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களில் ஒருவரை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வரவும் ஈபிஎஸ் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பொதுக்குழு நடத்த இடம்
ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு, சமீபத்தில் பொதுக்குழு நடந்த அதே மண்டபத்தில் இடம் தர மறுக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இதையடுத்து ஈசிஆர், ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடம் தேடினர். ஈசிஆர் பகுதியில் உள்ள விஜிபிக்கு சொந்தமான காலி இடத்தில் பொதுக்குழுவை நடத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்து, அங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. பின்னர் அந்த பணிகளும் நிறுத்தப்பட்டன. கோவையில் நடத்தலாம் என்றும் பேச்சு அடிபட்டது.
மீண்டும் அங்கேயே
இந்நிலையில், மீண்டும் வாகனரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்திலேயே பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அங்கு நேற்று பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இதற்கான பொறுப்பும் முந்தைய பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட செயலாளர் பெஞ்சமின் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் தரப்பு நம்பிக்கை
திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு தடை கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்றால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெறுவது உறுதி என்கிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.
தீவிர ஏற்பாடுகள்
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு மண்டபம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பெஞ்சமின் பொறுப்பில் நடைபெற்று வரும் இந்த ஏற்பாட்டுப் பணிகளை அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
ஏன் திறந்தவெளியில்?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனால் பொதுக்குழு நடத்துவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கவனமாக இருந்து வருகிறார்கள். முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி 3 ஆயிரம் இருக்கைகள் போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே, உள்ளரங்கத்தில் பொதுக்குழு நடத்தாமல் விசாலமான இட வசதிக்காக திறந்தவெளியில் பந்தல் அமைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.